பதிவு செய்த நாள்
01
செப்
2016
11:09
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில், பெங்களூரில், மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது; இங்கு, சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில், கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், சுற்றுச் சூழலுக்கு ஒவ்வாத, ரசாயனங்கள் கலந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்வோர் மற்றும் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும், வரும், 5ல், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல நிறங்களிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பெங்களூரில், சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில், மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சிலை விற்பனையாளர்கள் கூறியதாவது: ஆண்டு தோறும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை விற்பனை அமோகமாக இருக்கும். இந்த ஆண்டு, கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த திடீர் உத்தரவால், சிலை விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டது. எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை விற்பனை செய்வது குறித்து ஆலோசித்தோம். மஹாராஷ்டிர மாநிலத்தில், மாட்டுச் சாணத்தில், விநாயகர் சிலைகள் செய்யப்படுவதை அறிந்தோம். அங்கிருந்து, ஆர்டர் செய்து, நிறைய சிலைகளை வரவழைத்துள்ளோம். குறைந்தபட்சம், 100 ரூபாய் முதல், இந்த சிலைகள் கிடைக்கின்றன. ஹிந்துக்கள், மாட்டுச் சாணத்தை மங்களகரமாக கருதுவதால், இந்த வகை சிலைகளை மிக ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த சிலைகள் எளிதல் கரைந்துவிடும்; நீர்நிலைகளை மாசுபடுத்தாது. எனவே, வருங்காலங்களில், இவ்வகை சிலைகளின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -