பதிவு செய்த நாள்
03
செப்
2016
12:09
ஆர்.எஸ்.மங்கலம், :ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருக்கல்யாணம் நடக்கிறது. இக்கோயிலில் சதுர்த்தி விழா ஆக., 27ல் கொடியேற்றுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்ம, மயில், யானை, ரிஷப வாகனங்களில் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 4.30 மணிக்கு சித்தி,புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தமிழகத்தில் இரு தேவியருடன் விநாயகருக்கு திருமணம் நடக்கும் ஒரே கோயில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் மட்டும் தான் என்பதால் திருக்கல்யாண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசிப்பார்கள். விழாவின் தொடர்ச்சியாக நாளை தேரோட்டம், செப்.,5ல் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கிறது.