பதிவு செய்த நாள்
17
செப்
2016
04:09
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவில் எதிரே சங்கராபரணி ஆற்றில் உள்ள ராமர் பாதத்திற்கு புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
நாயக்க மன்னர்கள் செஞ்சியை ஆட்சி செய்த போது சங்கராபரணி ஆற்றங்கரையில் கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேசபெருமாள் மற்றும் கோதண்டராமர் கோவிலை கட்டி உள்ளனர். இக்கோவிலின் எதிரே சங்கராபரணி ஆற்றின் நடுவிலும், கரைகள் மீதும் மாசி மக தீர்த்தவாரி நடத்தவும், பிரம்மோற்சவத்தின் போது ஆற்று திருவிழா நடத்தவும் ஏராளமான மண்டபங்களை கட்டி உள்ளனர். ஆற்றின் நடுவில் உள்ள மண்டபத்தின் அருகே உள்ள பாறையின் மீது ராமர் பாதம், மகா விஷ்ணு, கெஜலட்சுமி, ஆஞ்சநேயர், சங்கு, சக்கரம், நாமம் ஆகியவற்றை புடைப்பு சிற்பமாக வடித்துள்ளனர். மன்னர்காலத்தில் இதற்கும் பூஜைகளை நடத்தி வந்தனர். முன்னுாறு ஆண்டுகளுக்கும் மேலாக இதில் வழிபாடு நடத்தாமல் இருந்தனர். புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மீண்டும் வழிபாடு துவங்கினர். இதை முன்னிட்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதில் விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் எத்திராஜ், கோதண்டராமர் கோவில் நிர்வாகி துரை ரங்கராமானுஜம், அருணகிரி, சுந்தரம், ராம்மூர்த்தி, பெருமாள், அப்பு பிள்ளை, பாகவதர் ராஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.