மதுரைக்கு பிழைப்புக்காக கணவனுடன் வந்த கண்ணகி, பாண்டியன் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினாள். தவறை உணர்ந்த மன்னனும், ராணியும் உயிர்விட்டனர். கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளை தெய்வமாக வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர். செண்பகப்பாண்டியன் காலத்தில் இது அம்மன் கோயிலாகி விட்டது. கண்ணகியின் சிலை உக்கிரமாக இருந்ததால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. கவலையடைந்த செண்பக பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றி, அவ்விடத்தில் தனது தேவி பார்வதியின் சிலையை அமைக்கச் சொன்னார். அதன்படி மன்னன், இங்கு அம்பாளை பிரதிஷ்டை செய்து, அவளையே பிரதானமாக்கி கோயிலை மாற்றி யமைத்தான். மன்னன் பெயரால், செண்பகத்தம்மன் என்றழைக்கப் பட்ட இவளது பெயர் காலப் போக்கில் செல்லத்தம்மன் என மருவியதாகவும் சொல்கின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு செல்லத்தம்மனே பிரதானமாகி விட்டாள். இவளுக்கு பூஜை முடிந்த பின்பு, கண்ணகிக்கு பூஜை நடக்கும். நவராத்திரி விழா இங்கு பிரசித்தம்.