பதிவு செய்த நாள்
07
அக்
2016
10:10
மலர்களாய் நீ உதிர்த்த வார்த்தைகள்
மழலை தேசத்தின் மந்திரம்
தெளிவாக பதியாத காலடிகளுக்கு
வண்ணம் பூசினேன் கிருஷ்ணர்
வருவாரென!
சுவற்றிலே உன் கிறுக்கல்...
ரவிவர்மனுக்கான படைப்பின் சவால் குழந்தையின் ஒவ்வொரு அசைவும் தாய்க்கு, ஒரு ஹைகூ கவிதை தான்; பத்து வார்த்தை சேர்ந்து பேசினாலே, பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென்று துடிக்கிறது தாய் மனசு. ஐந்து வயது நிறைந்த பின்பே, ஆரம்பப்பள்ளியில் அடி எடுத்து வைத்த பாக்கியம் பெற்றது, முந்தைய தலைமுறை.
இப்போது தவழ்ந்து, விழுந்து, நின்று, நடந்து, பேச துவங்கியதும், பள்ளியை தேடி, அட்மிஷன் போடும் காலம். விஜயதசமியை எதிர்பார்த்து, வித்யாரம்பம் செய்தபின், பள்ளியில் சேர்க்க காத்திருக்கும் பெற்றோர்களுக்கான, தகவல் இது. வித்யாரம்பம் என்றால், பச்சரிசியில் விரல் பிடித்து, எழுதி, பின், நாக்கில் தங்க ஊசியால், ஓம் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ என எழுதுவர் என்பது, அனைவரும் அறிந்ததே. இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும்,
சம்பிரதாயம் சார்ந்த காரணங்கள், பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அது என்னவென்று விளக்குகிறார், கோவை ஐயப்ப சேவா சங்க செயலாளர் விஜயகுமார்...நவராத்திரியின் முக்கிய தெய்வம் துர்க்கை தான். பெண் சக்தியை துணையாக கொண்டு நடந்த வதம், இறுதி நாள் வெற்றியை விவரிக்கும் நிகழ்வே, விஜயதசமி.
மகிஷாசுரனை வதம் செய்த, ஒன்பது இரவுகளை, மூன்று பகுதிகளாக பிரித்து, காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கான பூஜைகள் நடக்கும். பத்தாம் நாள், மகிஷாசுரனை கொன்று, உலகை காப்பாள் துர்க்கை. இந்த வெற்றியின் தினமே, விஜயதசமி. கல்வி, கேள்வி, அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு, பிள்ளையார் சுழி போடவும் ஏற்ற நாளாகும். இந்த நாளில், குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் செய்யப்படுகிறது. குழந்தைகள் மணலில் கிறுக்குவது வழக்கம். எழுத்துப்பயிற்சி அளிக்க, பச்சரிசியில் குழந்தையின் விரல் பிடித்து எழுதி, பின் நாக்கில் தேன் தடவி, தங்க ஊசியால், ஓம் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ என எழுதப்படும். முன்பு, காளிதாசன் என்ற பக்தருக்கு, கல்வி ஞானம் அளிக்க, துர்க்கை சூலத்தால் நாக்கில் எழுதியதாக, புராணங்கள் கூறுகின்றன. இதை முன்னிறுத்தி, நாக்கில் எழுதும் பழக்கம் பின்பற்றப்படுகிறது. இரண்டரை வயது முதலான குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் செய்யலாம், என்றார். -நமது நிருபர்-