மயிலாடுதுறை: மனிதர்கள் தமக்குள் இருக்கும் தீமையான எண்ணங்களை போக்கி நல்லவர்களாக மாறும் நாளாக எண்ணி இறைவனை வழிபட்டு தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதில் கிருதயுகத்தில் வாழ்ந்தவர்கள் தர்மசிந்தனை உடையவர்கள், திரேதாயுகத்தில் வாழ்ந் தவர்கள் தர்மசிந்தனையுடன் பொருள் பற்றும் உடையவர்களாக திகழ்ந்தனர். துவாபரயுகத்தில் வாழ்ந்தவர்கள் தர்ம சிந்தனையுடன் பொருள் பற்றும், காம உணர்வும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். கலியுகத்தில் தர்ம சிந்தனையே இல்லாமல் அனைத்தும் தரம்மாறி அமைந்துள்ளன.இக்கலியுகத்தில் பிறப்பதே பாவமென்று வேதவியாசர் கூறுகிறார். நாட்டில் தர்மத்திற்கு சோதனை வருகின்ற நேரத்தில் எல்லாம் இறைவன் தன் அருட்சக்தியைகொண்டு ஒரு சிருஷ்டியை உருவாக்கி தர்மத்தை நிலைநாட்டி வருகின்றார். துவாபரயுகத்தில் கிருஷ்ணன் அவத ரித்தார். இவரின் அவதாரத்தால் அழிந்தவன் தான் நரகாசுரன். இவன் தீமையே வடிவானவன். கிருஷ்ணரால் தன்அழிவை உணர்ந்த நிலையில் நரகாசுரன் தன் அழிவை மக்கள் மகிழ்ச்சி யுடன் கொண்டாட இறைவனிடத்தில் விண்ணப்பம் செய்து கொண்டான்.
அதனடிப்படையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பெறுகிறது. தீபாவளி இந்திய நாட்டு மக்கள் அனைவ ரும் கொண்டாடும் தேசியத் திருவிழாவாக விளங்குகிறது. இந்தியப் பெருநாடு பல்வேறு மதங்கள், மொழிகள் கலாசாரங்களில் மக்கள் வேறுபட்டிருந்தாலும் இந்தியா என்று நாட்டின் பெயரால் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுகிறார்கள். தீபம் + ஆவளி= தீபாவளி தீபம் என்பது விளக்கு. தீபாவளி பண்டிகையன்று விளக்குகளை வரிசையாக ஏற்றுவது வழக்கம். ஒரு வரின் இறப்பில் தீபம் ஏற்றுவது வழக்கம். அவ்வகையில்தான் நரகாசுரன் வதமான நாளாகிய தீபாவளி அன்று தீபம் ஏற்றி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் ஒருவரை ஒருவர் பார் க்கும் பொழுது கங்காஸ்நானம் ஆச்சா எனக்கேட்பர். தீபாவளி தினத்தன்று மட்டும் எண்ணெயில் மகாலட்சுமியும் வெந்நீரில் கங்கையும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். எனவே விடியற்காலையில் எண்ணெய்த் தேய்த்து நீராடவேண்டும். இவை கற்பனை கதையல்ல கடந்த யுகத்தில் நடந்த வரலாற்று உண்மை. அதனால்தான் கங்கா ஸ்நானம் ஆச்சா எனக்கேட் பர். இந்நாளில் நீராடி புத்தாடை உடுத்தி புதுபலகாரம் படைத்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். நரகன் வீழ்ந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தெரிந்த மக் கள் தமக்குள் இருக்கும் தீமையான எண்ணங்களைப் போக்கி நல்லவர்களாக மாறும் நாளாக எண்ணி இறைவனை வழிப்பட்டு கொண்டாட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும். அப்பொழுதுதான் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எல்லா நாளுடம் வாழமுடியும். இந்நாளில் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்றுவளமுடன் இனிது வாழ எல்லாம் வல்ல செந்தமிழ்ச்சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.