பதிவு செய்த நாள்
31
அக்
2016
12:10
ஈரோடு: வட இந்தியர்கள், லட்சுமி குபேர சிறப்பு வழிபாட்டில் நேற்று ஈடுபட்டனர். தீபாவளி தினத்தில் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவதை, வட இந்தியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், தீபாவளிக்கு அடுத்த முதல் அமாவாசை நாளில், லட்சுமி குபேர பூஜை முறையை கடைப்பிடிக்கின்றனர். இந்நாளில் தொழில் நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் புதிய கணக்கு நோட்டை லட்சுமி தேவியின் படத்தின் முன் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவர். அதை ஒட்டி ஈரோடு சேட்டு காலனி, இந்நிரா நகர், மோசிகீரனார் வீதி, கடைவீதி, கொங்காலம்மன் கோவில் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் கடை மற்றும் அலுவலகங்கள் வைத்துள்ள வட இந்தியர்கள் நேற்று புது கணக்கு நோட்டை, லட்சுமி தேவி படத்துக்கு முன் வைத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நோட்டை அடுத்த நிதி ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயன்படுத்துவர்.