பதிவு செய்த நாள்
09
நவ
2016
12:11
தஞ்சாவூர்: புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,031வது ஆண்டு சதய விழா, நேற்று, மங்கள இசை முழங்க துவங்கியது. உலக புகழ் பெற்று விளங்கும் பெரிய கோவிலை, கட்டிய பேரரசர் ராஜராஜ சோழன் பிறந்த நாள், சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 1,031 சதய விழா நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இதற்காக, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், நேற்று காலை மங்கள இசை முழங்க விழா துவங்கியது. சதய விழாவினை துவக்கி வைத்த கலெக்டர் அண்ணாதுரை பேசுகையில், ”1,031வது ஆண்டு சதய விழா, தஞ்சாவூரில் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அரசின் விழாவாக நடைபெறுகிறது. ராஜராஜன் சோழனின் கட்டடக் கலையை பறைசாற்றும் வகையில், பெரிய கோவில் திகழ்கிறது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தொழில் நுட்பத்துடன் சிறப்பாகவும், கட்டடக் கலையினை மேற்கொண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழினை நாம் பறைசாற்ற வேண்டும்,” என்றார். இன்று, ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெறும். பின், திருமுறை வீதிஉலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு, 48 வகையான பொருட்களால் பேராபிஷேகம் செய்யப்படுகிறது.