சபரிமலை மாளிகைப்புறத்தில் குடியிருப்பது மதுரை மீனாட்சி அம்மன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2016 06:11
சபரிமலை: மாளிகைப்புறத்தில் குடியிருப்பது மதுரை மீனாட்சி அம்மனான துர்கா தேவி என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் அஜய்தரயில் கூறியுள்ளார்.
பத்தணந்திட்டையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை கோயில் பெயரை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என்று மாற்றியது தொடர்பான ஆவணங்கள் தேவசம்போர்டின் சட்டத்துறை பிரிவு பரிசீலித்து வருகிறது. பெயர் மாற்றியது தவறு என்று யாராவது ஆதாரத்தோடு சமர்ப்பித்தால் அப்போது இதுபற்றி மறுபரிசீலனை செய்யப்படும். ஐயப்பன் கோயில் பெயர் மாற்றம் தொடர்பாக பண்டிதர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர்தான் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக பல வரலாற்று புத்தகங்கள் படிக்கப்பட்டது. திருவிதாங்கூர் மேனுவலிலும் ஐயப்ப சுவாமி கோயில் என்றுதான் கூறப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் தொடர்பான ஆவணங்களிலும் ஐயப்பன் கோயில் என்றுதான் உள்ளது. சபரிமலையில் தீ விபத்துக்கு பின்னர் புதிய விக்ரகம் பிரதிஷ்டைக்கு அரண்மனையில் உள்ள ஐயப்பன் சிலையின் மாதிரிதான் வங்கப்பட்டு புதிய சிலை செய்யப்பட்டுள்ளது. ஆதனால்தான் தர்ம சாஸ்தா கோயில் என்பது ஐயப்பன் கோயில் என்று பெயர் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இந்த மாற்றம் தொடர்பாக மாநில தேவசம்போர்டு அமைச்சருக்கு தகவல் கொடுக்காதது தேவசம்போர்டு தரப்பில் ஏற்பட்ட பெரும் தவறு ஆகும்.
சபரிமலை மாளிகைப்புறத்தில் பிரதிஷ்டை மதுரை மீனாட்சி அம்மனான துர்கா தேவியாகும். சபரிமலை கோயில் ஸ்தாபனத்தில் ஒரு பங்காளியாக இருந்த பாண்டிய மன்னரின் விருப்பத்துக்கு ஏற்ப மாளிகைப்புறத்தில் இந்த பிரதிஷ்டை நடத்தப்பட்டது. மாளிகைபுறத்தம்மன் ஐயப்பனை மணம் முடிக்க விரும்பியதாகவும், இதற்காக சரங்குத்திக்கு பவனி நடப்பதாகவும் கூறுவது தவறு. இந்த எழுந்தருளல் நிகழ்ச்சியில் தேவி விக்ரகம் இருக்காது என்று சபரிமலை தந்திரி கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.