பதிவு செய்த நாள்
26
நவ
2016
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, தீப திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் தேரின் பழுது பார்க்கும் பணி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா டிச., 3 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச.,9ல் முக்கிய விழாவான மஹா ரத தேரோட்டத்தில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேரில் வீதி உலா வருவர். வீதி உலா வரும் தேர் பழுது பார்க்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. முதல் கட்டமாக தேரின் மேல் மூடி வைக்கப்பட்ட கூரை தகடு, அகற்றப்பட்ட நிலையில் தேர்களுக்கு வண்ணம் பூசுதல், தேரில் உள்ள பொம்மை அலங்காரம் செய்தல், சக்கரம் பழுது பார்த்தல், தேர் அச்சுக்கு கிரீஸ் மற்றும் ஆயில் போடுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. தேரில் உள்ள மரச்சிற்பங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை, விலை உயர்ந்தவை. இதை பாதுகாக்கும் வகையில் தேருக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன் தேரில், பொருத்தப்பட்டுள்ள இரும்பு சக்கரத்தை ஆய்வு செய்ய, பெல் நிறுவனத்தினர் அடுத்த வாரம் வர உள்ளனர். இவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் அளித்த பின், தேர் இயக்கப்படும்.