பதிவு செய்த நாள்
26
நவ
2016
12:11
கம்பராஜபுரத்தில் கவனிப்பாரற்று கிடக்கும் கோவிலை, அகழ்வாராய்ச்சி செய்தால், பல வரலாற்று தகவல்கள் கிடைக்க கூடும், என, தொல்லியல் அறிஞர், ஸ்ரீதரன் தெரிவித்தார். தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன் கூறியதாவது: சென்னை - சித்துார் சாலையில், ராணிப்பேட்டைக்கு அருகில், நீவா நதிக்கரையில், திருவல்லம் உள்ளது. பாடல் பெற்ற இத்தலத்தில், பல்லவ, சோழர்களின் கல்வெட்டுகள் உள்ளன. அங்குள்ள ஒரு கல்வெட்டில், விஜயநந்தி விக்கிரமவர்மன் என்ற அரசனின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது, பல்லவர்களின் சமகாலத்தவரான, கங்க வம்ச அரசனின் பெயர். திருவல்லத்திற்கு தெற்கே, 0.5 கி.மீ., தொலைவில் கம்பராஜபுரம் உள்ளது; முன்னர், கங்கராஜபுரமாக இருந்திருக்கலாம். கம்பராஜபுரத்தில், பனந்தோப்பு என்ற பகுதியில் உள்ள விளை நிலத்தில், புதைந்த நிலையில் சிவன் கோவில் உள்ளது. அதன் சுவர்களில் மரங்கள் வளர்ந்து, சிதிலமடைந்துள்ளது. இது, கருப்பு கோவில் என, ஊர் மக்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவில், கடினமான கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளதால், இவ்வாறு அழைக்கப்படலாம். இதில், கருவறை புதைந்துள்ளதால், லிங்கம் இல்லை. உருளை வடிவ துாண்களுடன், தரங்க போதிகை கொண்ட முன்மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வெளியில் உள்ள, நந்தி, தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உடைந்துள்ளன. கிழக்கு, தெற்கு பகுதிகளில், வாயில்கள் உள்ளன. கருவறை உத்தரப் பகுதியில், முனிவர் வழிபடுதல், நடன மங்கை சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன. அரைத் துாணில், லிங்கத்தை வணங்கும் அடியாரின் புடைப்பு சிற்பம் உள்ளது. கருவறை தேவ கோட்டத்திற்கு மேல், வெளிச்சுவரில் மகர தோரணம் உள்ளது. அதன் நடுவே, இந்திரன் லிங்கத்தை வழிபடும் காட்சியும், அரைத் துாணில், இசைக் கலைஞர்கள், நடன மங்கை சிற்பங்களும் உள்ளன. கடந்த, 1898ல், இந்திய தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்ட இக்கோவிலில், கல்வெட்டு குறிப்பு உள்ளது. அதன்படி, விக்கிரம சோழனின் ஆட்சியில், அவன் நில தானம் வழங்கியதை அறிய முடிகிறது. தற்போது, அக் கல்வெட்டும் உடைந்து சிதறிக் கிடக்கிறது. இந்த கோவில் அமைப்பு, 9 - 10ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக உள்ளது. இதைச் சுற்றி மண்மேடு உள்ளதால், மற்ற கல்வெட்டுகளை பார்க்க முடியவில்லை. மணல், மரங்களை அகற்றி, கோவிலை அகழாய்வு செய்தால், ஒன்பதாம் நுாற்றாண்டின் வரலாற்று சான்றுகள் கிடைக்க கூடும். இவ்வாறு அவர் கூறினார்.