பதிவு செய்த நாள்
26
நவ
2016
12:11
மேட்டுப்பாளையம்;வனபத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில், காணிக்கையாக, 31.65 லட்சம் ரூபாய் இருந்தது. இதில், ரூ.9 லட்சம் செல்லாத ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் இருந்தன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை, 75 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர்சினி, கோவில் உதவி கமிஷனர் ராமு, இன்ஸ்பெக்டர் சேகர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவில் ஊழியர்கள், விஷ்ணு சேவா சங்கம், ஆலய சேவா சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 31 லட்சத்து 65 ஆயிரத்து 856 ரூபாய் இருந்தது. இதில், செல்லாத ரூ.1,000 நோட்டுகள், மூன்று லட்சத்து, 26 ஆயிரம் ரூபாயும், ரூ.500 நோட்டுகள், ஆறு லட்சத்து, ஆயிரம் ரூபாயும் இருந்தன. அன்னதான உண்டியலில், 76 ஆயிரத்து, 362 ரூபாய் இருந்தது; 178 கிராம் தங்கமும், 448 கிராம் வெள்ளியும் இருந்தன. இவை, கோவில் பெயர் கணக்கில், கார்ப்பரேஷன் வங்கியில் செலுத்தப்பட்டது.