பதிவு செய்த நாள்
28
நவ
2016
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா டிச. 4ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடக்கமாக டிச. 3ல் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜைகள் நடக்கிறது. டிச. 4 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வாைனயுடன் கொடிக்கம்பம் முன் எழுந்தருள்வார். பூஜைகள் முடிந்து காலை 11:30 மணிக்கு கார்த்திகை திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படும்.
மகா தீபம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச. 11ல் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், டிச. 12 காலையில் சிறிய வைரத் தேரோட்டம், மாலையில், மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 16கால் மண்டபம் முன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. டிச. 12ல் சரவணப் பொய்கையில் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
தினம் ஒரு வாகனத்தில் சுவாமி: திருவிழா நடைபெறும் நாட்களில் தினம் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், காமதேனு வாகனங்களில் தினம் ஒன்றில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். ஆறாம் நாள் திருவிழாவில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் சுவாமியுடன் சத்தியகிரிஸ்வரர், பிரியாவிடை, கோவர்த்தனாம்பிகை அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் புறப்பாடும், 7ம் நாள் திருவிழாவில் காலை சுவாமியுடன், கங்காளநாதர் புறப்பாடும், மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன் புறப்பாடும் நடக்கிறது.