பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
சபரிமலை: சபரிமலையில் பக்தர்களுக்கு உதவுவதற்காக தகவல் மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை வரும் அனைத்து மாநில பக்தர்களின் வசதிக்காக தேவசம்போர்டின் தகவல் மையம் சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் செயல்படுகிறது. பி.ஆர்.ஓ. முரளி கட்டுப்பாட்டில் இந்த அலுவலகம் செயல்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட, ஆங்கிலம், இந்தி என ஆறு மொழிகளிலும் பக்தர்களுக்கு உதவ இங்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கூட்டு பிரிந்து நிற்பவர்களை ஒலிபெருக்கியில் அறிவித்து உடன் வந்தவர்களுடன் சேர்த்து வைக்கும் பணி இங்கு முக்கியமாக செய்யப்படுகிறது. பக்தர்கள் தவற விடும் பை, பொருட்கள் இங்கு ஒப்படைக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த தகவல் மையத்தின் டெலிபோன் எண் 04735 - 202 048. இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் சபரிமலையில் நடை திறந்து, அடைக்கும் நேரம், பூஜைகள் மற்றும் அதன் கட்டணங்கள், கூட்ட நிலைமை, காலநிலை போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும், 24 மணி நேரமும் இந்த மையம் செயல்படும் என்றும் பி.ஆர்.ஓ. முரளி கூறினார்.
கைது: சபரிமலையில் அன்னதானம், வழிபாடுகள், பூஜைகள் நடத்தி தருவதாக கூறி பேனர் கட்டி பணம் வசூலிக்க முயன்றதாக ஆந்திர மாநிலம் காக்கி நாடாவை சேர்ந்த அச்சிராஜூ 62, என்பவரை சன்னிதானம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.