கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் சிம்மபுரிஸ்வரர் சிவன் கோவில் அருகில், காவிரி கரையில் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் கோவில் சிலை முழுவதும் தண்ணீர் நிரப்பி, மழைவேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, கருப்பத்தூர் காவிரிக்கரை ஓரத்தில் சிம்மபுரிஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. கோவில் அருகில் கிருஷ்ணதேவர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட, ஏழு அடி உயரத்தில் தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மழைவேண்டி நேற்று முன்தினம் கோவில் சன்னதியை, சிமெண்ட் செங்கல் மூலம் மறைத்து கட்டப்பட்டு, அதன் மூலம் காவிரி நீர் ஊற்றி மூடினர். பின், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.