பதிவு செய்த நாள்
02
டிச
2016
04:12
அகண்ட சச்சிதானந்தப் பரம்பொருள் ஜீவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகைப் படைத்து ஆக்கல், காத்தல், ஒடுக்குதல் என்ற லீலைகளைப் புரிய, தனது மாயையின் துணைகொண்டு ஆக்கும் கடவுளாக சதுர்முக பிரம்மாவாகவும், காக்கும் கடவுளாக நாராயணனாகவும், ஒடுக்கும் கடவுளாக சிவபெருமானாகவும் ஆனார். சிருஷ்டிக்கப்பட்ட ஜீவர்களோ தங்கள் வாழ்க்கையில் தாங்கள் படுகின்ற இன்ப துன்பங்களுக்குத் தங்கள் ஆசைகளும் கர்மவினைகளுமே காரணம் என்று அறியாமல், இந்த பாழாய்ப் போன கடவுள் என்தலைவிதியை இப்படி நிர்ணயித்துவிட்டான், என்னை ஏழையாக வாழ வைத்துவிட்டான். என் பிரியமான குழந்தையை என்னிடமிருந்து பறித்துவிட்டான் என்று பழியைக் கடவுள் மீது சுமத்தி வசைபாடி வந்தனர்.
இப்படி இருக்கையில் ஒருநாள் சனகாதி ரிஷிகளுக்கு ஆன்மிக தத்துவத்தைக் குறித்து சந்தேகம் ஒன்று ஏற்பட்டது. அதைக்களைய பிரம்மாவிடம் சென்றனர். அவரோ சனகாதிகள் வந்ததைக் கவனிக்காமல் சரஸ்வதி தேவியின் வீணை இசையில் லயித்திருந்தார். எனவே அவர்கள் அங்கிருந்து வைகுண்டம் சென்றனர். நாராயணரோ லக்ஷ்மிதேவியின் பாத சேவையை ஏற்று, யோக நித்திரையில் இருந்தார். ஏமாற்றம் அடைந்த சனகாதிகள் கடையசியாகக் கயிலாயம் சென்றனர். சிவபெருமானோ பராசக்தியை மடியில் அமர்த்திக் கொண்டு இருந்ததைப் பார்த்த சனகாதிகள் சோகமுற்று இல்லறவாழ்வில் மயங்கி இருக்கும் இம்முப்பெரும் தெய்வங்களும் தங்களுக்கு குருவாக இருக்கத்தகுதியற்றவர்கள் என்று திரும்பினர்.
சனகாதிகளின் எண்ணங்களை அறிந்த இறைவன் சாதாரண ஜீவர்கள்தான் அறியாமையினால் தெய்வங்களை நிந்திக்கின்றனர். இந்தப் பக்குவப்பட்ட ஜீவர்களாகிய சனகாதி குழந்தைகள் கூட நம்மை இல்லற வாழ்க்கையில் மயங்கி இருப்பதாகத் தவறாக நினைத்து விட்டார்களே என்று பரிதாபப்பட்டு, என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
அப்போது பராசக்தி சிவபெருமானிடம், இறைவா, தாங்கள் சக்தியுடன் சேர்ந்திருக்கும்போது தான் ஜீவர்களின் பிறப்பு, காப்பு, இறப்பு என்று சம்சாரலீலை நடைபெறும். இந்த உண்மையை அவர்கள் மறந்துவிட்டார்கள். எனவே தாங்கள் ஆத்ம வித்தையை சனகாதிகளுக்கும் மற்ற பக்குவமடைந்த ஜீவர்களுக்கும் உபதேசித்து அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
சிவபெருமானும் தக்ஷிணாமூர்த்தியாகக் காட்சி கொடுக்க சனகாதிகள் அவரைச் சரணடைந்து, அறியாமையினால் பலவாறு காட்சியளிக்கும் இந்த சிருஷ்டி உண்மையில் பரப்பிரம்மமே என்று தெளிந்தனர். அவர்களைப் பின் தொடர்ந்து மற்ற ஜீவர்களும் ஆசைகளைத் துறந்து பகவானைச் சரணடைந்து ஞானம் பெற்று சம்சாரச் சுழலிலிருந்து விடுபட்டனர். ஞானகுருவாக வந்து தங்களை சம்சார சுழலிருந்து விடுவித்த இறைவனை மனதாரப் புகழ்ந்து கொண்டாடினர். என்னே விசித்திரம் கடவுளும்கூட ஞானகுருவாக இருந்தால்தான் மக்களின் வசைகளிலிருந்து தப்பிக்க முடிகிறது!
கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த படி, நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் மற்றும் எல்லாக் கலைகளிலும் வல்லவர்களான சனகாதி நால்வருக்கும், வாக்கிற்கு அப்பாற்பட்ட நிறைவாயும், மறைகளுக்கு அப்பாற்பட்ட தாயும், எல்லாமாயும் அல்லது மாயும் உள்ள சத்திய வஸ்துவை உள்ளபடிக் காண்பித்துச் சொல்லாமல் சொன்னவரை எப்போதும் மறவாது நினைத்தபடி இருந்தால் சம்சாரப் பெருங்கடலை வெல்வோம் என்று தக்ஷிணாமூர்த்தியைச் சரணடைந்து ஞானத்தை அடைய பரஞ்சோதி முனிவர் நம்மை எல்லாம் அழைக்கின்றனர்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதல் கற்றகேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்துகாட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல்
நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.