மதுரை: தம்பிக்கு இலக்கணமாக திகழ்ந்தவன் பரதன், என, ஆர்.பி.வி.எஸ்.மணியன் குறிப்பிட்டார். மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கத்தில் நடந்த ராமாயண தொடர் சொற்பொழிவில், அவர் பேசியதாவது: ராமன் காட்டுக்குச் சென்றதை அறிந்த தசரதர் மரணம் அடைந்தார். கேகய நாட்டிற்குச் சென்ற ராமனின் தம்பி பரதன் அயோத்தி திரும்பினான். தாய் கைகேயி செய்த சூழ்ச்சியால் ராமன் காட்டுக்குச் சென்றதை அறிந்து, அவள் மீது ஆத்திரம் கொண்டான். அமைச்சர் சுமந்திரர், குலகுரு வசிஷ்டர் ஆகியோருடன் ராமனைக் காணப் புறப்பட்டான். தந்தை இறந்த தகவலை ராமனுக்கு தெரிவித்து, இறப்புக்கான பிதுர்க்கடன் செய்ய ஏற்பாடு செய்தான். தந்தைக்கு மூத்த பிள்ளையான ராமனை, நாடாள வரும்படி பரதன் வேண்டினான். மூத்தவன் இருக்க இளையவனுக்கு பட்டம் கட்டுவது தர்மம் ஆகாது. என்னுடன் வராவிட்டால் உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுவேன் என சொல்லி அழுதான். தந்தையின் வாக்கை காப்பாற்ற காட்டில் 14 ஆண்டு தவ வாழ்வில் ஈடுபட விரும்புவதாக ராமன் தெரிவித்தார். தம்பிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த பரதன், அண்ணன் மீதுள்ள அன்பால், அவரது பாதுகையைப் பெற்று நாட்டுக்குத் திரும்பினான். அப்பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்து ராமனின் பிரதிநிதியாக அயோத்தியை ஆட்சி செய்தான். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சி டிச., 11 வரை மாலை 6:30 மணிக்கு நடக்கும்.