பக்தர்கள் பாதுகாப்புக்காக சபரிமலை பாதையில் டிராக்டர்களுக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2016 01:12
சபரிமலை: பக்தர்களின் பாதுகாப்பை கருதி சபரிமலை பாதையில் டிராக்டர்களின் வேகம் குறைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரங்களில் டிராக்டர் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு வரை பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பொருட்கள் தலை சுமடாகவும், கழுதை மீதும் ஏற்றி செல்லப்பட்டு வந்தது. கழுதைகளால் பக்தர்களுக்கு சிரமமும், கழுதை சாணத்தால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சுவாமி ஐயப்பன் ரோடு அமைக்கப்பட்ட பின்னர் டிராக்டர்கள் ஓட தொடங்கியது. கரடுமுரடான ரோட்டில் டிராக்டர் செல்வது சிரமமாக இருந்த நிலையில் இந்த ரோடு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் போடப்பட்டது. இதனால் டிராக்டர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வந்து செல்கிறது. கான்கீரிட் போடுவதற்கு முன்னால் ஒரு நாளில் ஒரு டிராக்டர் ஐந்து முறை சன்னிதானம் வந்து சென்றால் இப்போது 15 முறை வந்து செல்கிறது. பொருட்கள் தடையின்றி வந்ததால் கழுதைகள் முழுமையாக தடை செய்யப்பட்டது.
தற்போது பக்தர்கள் திரும்பி செல்ல சுவாமி ஐயப்பன் ரோடு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. டிராக்டர்கள் வேகமாக செல்வதால் பக்தர்கள் செல்வதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார்கள் வந்த நிலையில் டிராக்டர்களின் வேகம் மணிக்கூருக்கு ஐந்து கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று முதல் காலை ஒன்பது மணி வரையிலும், மாலை நான்கு முதல் இரவு 10 மணி வரையிலும் டிராக்டர் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மிக அத்தியாவசிய தேவகளுக்கு தடை செய்யப்பட்ட நேரத்திலும் பாதுகாப்புடன் டிராக்டர்கள் இயக்கப்படும்.