பதிவு செய்த நாள்
17
டிச
2016
03:12
தனித்தன்மையுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!
உங்களுக்கு தற்போது 2ல் இருக்கும் குரு சாதகமாக இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். ஜன. 16ல் குருபகவான் 3-ம் இடத்திற்கு அதிசாரமாக மாறுவதால் முயற்சியில் தடை ஏற்படலாம். இருந்தாலும் குருவின் 5,7,9-ம் பார்வை பலத்தால் தடைகளை முறியடித்து சிங்க நடையால் சிகரம் தொடுவீர்கள். மார்ச்10 முதல் ஆக.31 வரை வக்ரம் அடைகிறார். இந்த காலக் கட்டத்தில் நன்மை அதிகரிக்கும். தற்போது ராகு உங்கள் ராசியில் இருப்பதால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். ஜூலை26ல் அவர் இடம்மாறி 12-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். இதனால் பொருள் விரயம், துõர தேச பயணம் ஏற்படலாம். கேது தற்போது 7-ம் இடமான கும்பத்தில் இருந்து உடல்நலக்குறைவை அளிக்கலாம். ஆனால், ஜூலை26ல் 6-ம் இடமான மகர ராசிக்குச் செல்வதால் நிலைமை சீராகும். பொன், பொருள் சேரும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் சாதகமற்று இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக இருக்கிறது. பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். சனிபகவான் ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைவதால் நற்பலன் குறையும். டிச.18ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுவதால் வாழ்வில் சிரமம் குறுக்கிடலாம். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம்.
இந்த ஆண்டு குரு பார்வை பலத்தால் கூடுதல் நன்மை காண்பீர்கள். அவ்வப்போது செலவு குறுக்கிட்டாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கும். மார்ச் 10 க்கு பிறகு குடும்பத்தில் இருந்த மந்த நிலை மறையும். மனதில் துணிச்சல் பிறக்கும். தேவைகள் குறைவின்றி நிறைவேறும். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். குருவின் 5,7,9 பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். சமூகத்தில்
செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பர வசதி பெருகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை
மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.
தொழில், வியாபாரம்: லாபம் படிப்படியாக அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி ஓரளவு வெற்றி பெறும். கூட்டுத்தொழிலில் வருமானம் சீராக இருக்கும். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்கலாம். தொழில் விஷயமாக அலைச்சல் ஏற்படலாம். சிலர் வெளியூரில் தங்க நேரிடலாம்.
பணியாளர்கள்: அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால், அதற்குரிய
வருமானம் கிடைக்கும். சிலருக்கு பணியிடத்தில் நெருக்கடி உருவாகலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். பிரச்னை குறுக்கிட்டாலும், குருவின் பார்வை பலத்தால் நன்மை உண்டாகும்.
கலைஞர்கள்: தொழிலில் சிறந்து விளங்குவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால்
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.
அரசியல்வாதிகள்:புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. ஜூலை26க்கு பிறகு விரும்பிய பதவி, பாராட்டு வந்து சேரும்.
மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் விடாமுயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வை பலமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஆசிரியர்களின் அறிவுரை கை கொடுக்கும்.
விவசாயிகள்: உழைப்பிற்கு ஏற்ப நற்பலன் காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் நெல், கோதுமை, கொண்டைக்கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரம் சுமாராக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம். ஜூலை25க்கு பிறகு எள், கொள்ளு, பயறு வகைகளில் மகசூல் அதிகரிக்கும். சிலர் புதிய சொத்து வாங்குவர்.
பெண்கள்: தேவை குறையின்றி பூர்த்தியாகும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். ஆண்டின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.ஆண்டின் பிற்பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சியுடன் இருப்பர்.
செல்ல வேண்டிய கோவில்: திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில்.
பரிகாரம்: ராமபக்தர் ஆஞ்சநேயரை வணங்குங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். பத்ரகாளியம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி பூஜை செய்யவும். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள்.