மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) நீங்க தான் ‘பாஸ்’ உங்களுக்கே ‘மாஸ்’ (85/100)
பதிவு செய்த நாள்
17
டிச 2016 03:12
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் மகர ராசி அன்பர்களே!
ராசி நாதனான சனிபகவான் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. இந்த ஆண்டு சிறப்பாக அமையும். 9-ம் இடத்தில் இருந்து நன்மையளித்த குருபகவான் ஜன.16ல் 10-ம் இடத்திற்கு அதிசாரமாக வருகிறார். இதனால் நற்பலன் சற்று குறையும். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 5,9ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. இதன் மூலம் இடையூறைத் தகர்த்தெறிந்து முன்னேற்றம் காண்பீர்கள். மார்ச் 10 முதல் ஆக.31 வரை குருபகவான் வக்ரம் அடைகிறார். இந்த காலக் கட்டத்தில் நன்மை மேலோங்கும். சனி பகவான் தற்போது 11ம் இடமான லாபஸ்தானத்தில் இருக்கிறார். பெண்களால் பொன், பொருள் சேரும். பணம் பலவழிகளில் வந்து சேரும். நீங்கள் தான் இந்த ஆண்டின் ‘பாஸ்’ ஆக விளங்குவீர்கள். பலரும் உங்களைச் சுற்றி வந்த வண்ணம் இருப்பர்.
விருச்சிக ராசியில் இருக்கும் சனிபகவான் ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைவதால் சனியால் ஏற்பட்ட நன்மை சற்று குறையலாம். டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். ராகு 8-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் முயற்சியில் தடை, உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஜூலை 26 ராகு 7-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் வீண் குழப்பத்திற்கு ஆளாக நேரிடலாம். கேது 2-ம் இடமான கும்பத்தில் இருந்து அரசு வகையில் பிரச்னைக்கு ஆளாகி இருப்பீர்கள். ஜூலை 26ல் மகர ராசிக்கு வருவதால் வீண் அலைச்சல், பணிச்சுமையை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். சமூகத்தில் மதிப்பு உயரும். மார்ச் 10க்கு பிறகு வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். கணவன்-, மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு மறையும். அவர்களுக்குள் இணக்கம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவர். உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.
தொழில், வியாபாரம்: எதிர்பார்த்ததை விட ஆதாயம் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொழிலில் நல்ல வளர்ச்சி காணலாம். மறைமுகப்போட்டி இனி இருக்காது. பங்குதாரர்களிடையே ஒற்றுமை மேம்படும். அரசு வகையில் இருந்த பிரச்னை ஜூலை 26க்கு பிறகு மறையும். வரவு, செலவு கணக்கை சரியாக வைப்பது அவசியம். தொழில் ரீதியான பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பணியாளர்கள்: பணிச்சுமை அதிகரிக்கலாம். ஆனால், வருமானத்திற்கு குறைவிருக்காது. சிலருக்கு இட, பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளை அனுசரித்து போவது நன்மையளிக்கும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பிரச்னைக்குரிய தீர்வு உடனடியாக கிடைக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையுள்ள காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. வேலை இன்றி இருப்பவர்கள் விடாமுயற்சியுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கப் பெறுவர். ஜூலை 26க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்கள்: மார்ச் முதல் ஆகஸ்ட் வரை புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். மக்கள் மத்தியில் புகழ், பாராட்டு வந்து சேரும். நடிப்புத் திறனும், கலைநயமும் மிக்கவராகத் திகழ்வீர்கள்.
அரசியல்வாதிகள்:சீரான வளர்ச்சி காண்பர். தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியில் சிறந்து விளங்குவர். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சிறப்பான காலகட்டமாக அமையும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள்: கரும்பு, எள், கீரை, காய்கறி வகைகளில் நல்ல மகசூல் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். ஜூலை 26க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும்.
பெண்கள்: குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி காண்பர். ஆடம்பர பொருள் வாங்குவர். பிறந்த வீட்டினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஜூலை 26க்கு பிறகு ராகுவால் ஏற்பட்ட மனக்குழப்பம், பொருள் இழப்பு முதலியன மறையும்.
செல்ல வேண்டிய கோவில்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில்.
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவுங்கள். சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள்.
|