பதிவு செய்த நாள்
02
ஜன
2017
02:01
ஓசூர்: ஓசூர், ராஜகணபதி நகரில் உள்ள, வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், 1,008 வடமாலை சாற்றி, கடலைக்காய் திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜகணபதி நகரில், பிரசித்தி பெற்ற வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் கடலைக்காய் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 59வது கடலைக்காய் திருவிழா, நேற்று காலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 9:00 மணிக்கு மங்களாரத்தி மற்றும் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வரசித்தி ஆஞ்சநேயருக்கு, 1,008 வடமாலை சாற்றி, பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இறுதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கடலைக்காய்களை கோவில் கோபுரம் மீது தூக்கி வீசி, ஆஞ்சநேயரை வழிபட்டனர். அத்துடன், கோபுரத்தில் மீது வீசப்பட்ட கடலைக்காயில், கீழே விழுந்தவற்றை மட்டும், பக்தர்கள் பிரசாதமாக வீடுகளுக்கு எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சொக்கலிங்கம், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் செய்தனர்.