பதிவு செய்த நாள்
17
ஜன
2017
12:01
உத்திரமேரூர்: திருமுக்கூடலில், பார் வேட்டை திருவிழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருமுக்கூடலில் பிரசித்தி பெற்ற, அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம், 2ம் தேதி (மாட்டு பொங்கல் அன்று) பார் வேட்டை திருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டிற்கான விழா, நேற்று முன்தினம் நடந்தது. பார் வேட்டைக்காக காலை, 7:00 மணிக்கு, காஞ்சிபுரத்தில் இருந்து, வீதி உலாவாக புறப்பட்ட வரதராஜ பெருமாள், பழையசீவரம் மலை கோவிலுக்கு வந்து, அங்குள்ள லட்சுமி நரசிம்ம சுவாமியை சந்தித்தார். இருவருக்கும், அங்கு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனைகள் நடந்தன. அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து, வரதராஜ பெருமாள் மற்றும் லட்சுமி நரசிம்ம சுவாமிகள், நாதஸ்வரம், மேள வாத்தியம் முழங்க, பாலாற்றின் வழியாக, திருமுக்கூடலில் உள்ள அப்பன் வெங்கடேச பெருமாளை சந்தித்தனர்.
முன்னதாக, சாலவாக்கத்தில் இருந்து வந்திருந்த சீனிவாச பெருமாள், காவாந்தண்டலம் லட்சுமி நாராயண சுவாமியும், அப்பன் வெங்கடேச பெருமாள் சன்னிதியில், கோபுர வாசலில் அமர்ந்து தரிசனம் அளித்திருந்தனர். பின், ஐந்து சுவாமிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்து, தங்களுக்கான தனி, தனி இடங்களில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பால், தயிர், பன்னீர், இளநீர், பழவகைகள் மற்றும் வாசனை திரவியங்களால், சுவாமிகளுக்கு அப்போது சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின், இரவு, 7:30 மணிக்கு, திருமுக்கூடல் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, அனைத்து சுவாமிகளும் அவரவர் இருப்பிடங்களான கோவில்களுக்கு சென்றனர்.