Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பதினேழாம் அத்தியாயம்
பகவத்கீதை | சிரத்தாத்ரய விபாக யோகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 அக்
2011
04:10

அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.

மூன்றுவித சிரத்தை 1-7 மூன்றுவித உணவு 8-10 -மூன்று வித ஆராதனை 11-13 -மூன்றுவிதத் தபசு 14-19 -மூன்றுவித தானம் 20-22 -குறைகளை நிறையாக்குதல் 23-28.

அர்ஜுந உவாச

1. யே ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:  

அர்ஜுந உவாச, க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, யே ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவர்கள் சாஸ்திர விதியை மீறி, ஸ்ரத்தயா அந்விதா: யஜந்தே-ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ, தேஷாம் நிஷ்டா து கா-அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம:-சத்துவமா அல்லது ரஜசா, தமசா?

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)

ஈண்டுக் கேள்வியொன்று கிளப்ப அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. முன்னேற்றமடைய வேண்டுமென்று யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவனிடத்து சிரத்தையிருக்கிறது. ஆதலால் அவன் காமம், குரோதம், லோபம் இவைகளின் வசப்படமாட்டான். ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி ஒன்றும் நினையாது தேவாராதனை செய்கிற பாங்குடன் கர்மங்களில் ஈடுபடுகிறான். அப்படிச் செய்வதால் அவன் மேன்மையடைகின்றானா இடைநிலையில் ரஜோகுணத்துக்குட்பட்டு நின்றுவிடுகிறானா அல்லது தமோகுணத்துக்கு உரியவனாய்க் கீழ்மையடைகின்றானா? மனித வாழ்க்கையில் சாஸ்திரத்தின் ஆணை முற்றிலும் இன்றியமையாததா, என்பது கேள்வி.

ஸ்ரீபகவாநுவாச

2. த்ரிவிதா பவதி ஸ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்ருணு  

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், தேஹிநாம் ஸ்வபாவஜா-ஜீவர்களிடம் இயற்கையான சுபாவத்தால் உண்டான, ஸா ஸ்ரத்தா-அந்த நம்பிக்கை, த்ரிவிதா பவதி-மூன்று வகையாகத் தோன்றுகிறது, ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி-சாத்விகம், ராஜசம், தாமசம் என, தாம் ஸ்ருணு-அதைக் கேள்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.

முற்பிறப்பில் செய்த வினைகள் சம்ஸ்காரங்களாக மனதில் பதிந்து அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக வடிவெடுக்கிறது. பிறகு இயல்புக்கு ஏற்றபடி அவன் புதிய ஜன்மத்தில் வினையாற்றுகிறான். இயல்பையும் வினையையும் கொண்டு ஒருவனிடம் படிந்துள்ள குணத்தைக் கண்டுபிடிக்கலாம்.

3. ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்ரத்தா பவதி பாரத
ஸ்ரத்தாமயோऽயம் புரு÷ஷா யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:  

பாரத-பாரதா, ஸர்வஸ்ய ஸ்ரத்தா ஸத்த்வாநுரூபா பவதி-யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே அமைகிறது, அயம் புருஷ: ஸ்ரத்தாமய:-மனிதன் சிரத்தை மயமானவன், ய: யத் ஸ்ரத்த: ஸ:-எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ அவன்,
ஸ: ஏவ-அந்தப் பொருளேதான் ஆகிறான்.

பொருள் : பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.

விழிப்பும், மன எழுச்சியும், வகையுடன் விரைந்து வினையாற்றுதலும், வினையாற்றுதலில் உள்ள மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இத்தனையும் சேர்ந்து சிரத்தையெனப் பெயர் பெறுகிறது. இதுவரையில் மனிதன் அடைந்துள்ள பாங்கு, இனி அவன் அடையப்போவது, இவை யாவையும் அவன்பால் உள்ள சிரத்தையைக் கொண்டு அளந்துவிடலாம். வானை நோக்கி வீசிய கல், அதற்குக் கொடுத்த வேகத்துக்கு ஏற்ப உயரப் போகிறது. மரம் தன் உள்வலிவுக்கு ஏற்ப வானுற வளர்கிறது. அங்ஙனம் மனிதனிடத்துள்ள சிரத்தைக்கேற்ப அவன் மேலோன் ஆகிறான். நசிகேதன் என்னும் ரிஷி புத்ரன் சிரத்தையே வடிவெடுத்தவன் ஆனான். அவனுடைய தந்தை ஆற்றிய விச்வஜித் யக்ஞம் குறைபட்ட யக்ஞமாயிருந்தது. மைந்தனுக்கு அக்குறையைக் காணப்பிடிக்கவில்லை. ஆகவே சிரத்தையானது அவனுடைய மனதுதகத்து எழுந்தது. தந்தையின் ஆணைப்படி அவன் யமலோகத்துக்குச் சென்றான். பிதாவின் குறைபிலையை நிறைநிலையாக்கினான். உலக முன்னேற்றத்துக்கு ஏதுவான முயற்சி யாது என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் தானே ஆத்ம ஞானத்தை யமனிடமிருந்து கற்றுக் கொண்டான். இத்தனையும் சீரிய சிரத்தையால் அவனுக்கு அமைந்தன. ஒருவனுடைய சிரத்தையை அளப்பது அவனையே அளப்பதற்கு ஒப்பாகிறது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

சிரத்தையானது வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வடிவெடுக்கிறது. அவைகளில் ஒன்று ஆராதனை அல்லது வழிபாடு. அது வருமாறு :

4. யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷõம்ஸி ராஜஸா:
ப்ரேதாந்பூதகணாம்ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:  

ஸாத்த்விகா தேவாந் யஜந்தே-ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர், ராஜஸா: யக்ஷரக்ஷõம்ஸி-ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்), அந்யே தாமஸா ஜநா:-மற்றத் தமோ குணமுடையோர், ப்ரேதாந் பூதகணாந் ச-பிரேத பூத கணங்களுக்கு, யஜந்தே-வேள்வி செய்கிறார்கள்.

பொருள் : ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.

அவரவர் தன்மைக்குத் தகுந்தாற்போன்று மனிதர் மனிதரோடு இணக்கம் வைக்கிறார்கள். நல்லவர் நல்லாரைச் சார்தலும், கெட்டவர்கள் கெட்டவர்களோடு இணக்கம் வைப்பதும் இயல்பு. அதேபோன்று தெய்வ வழிபாட்டிலும் படித்தரங்கள் பல அமைகின்றன. சாத்விக குணமுள்ள நல்லார் பரமாத்மாவைப் பற்றி நிற்கின்றார்கள். பரமாத்மாவின் சொரூபங்களாக சிவம், சக்தி, விஷ்ணு, கணபதி, சுப்ரமணியம் முதலிய தெய்வங்கள் இலங்குகின்றன. இயற்கையில் துஷ்டத்தனம் நிறைந்த சக்தியைக் கையாளுபவர்கள் ரஜோகுணத்தினின்று வந்த சிற்றியல்பை உடையவர்களேயாம். அத்தகையவர்கள் வழிபாட்டுக்காகவென்று கற்பித்துக்கொள்ளும் தெய்வங்களும் கொடூரம் வாய்ந்தவைகளாக, துஷ்டத்தனம் நிறைந்தவைகளாக இருக்கும். சோம்பலும் அக்ஞான இருளும் நிறைந்தவர்கள் அதற்கேற்ற இயற்கையின் பகுதியைப் பாராட்டுகிறார்கள். தமோகுணம் பொருந்தியவர்கள் கற்பிக்கும் வனதேவதைகள் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்கு செய்பவைகளாகத் தென்படும். இவர்களுள் சாத்துவிக சுபாவமுடையவர்கள் மிகச் சிலர். பெரும்பான்மையோர் போக்கு எத்தகையது எனின்:

5. அஸாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:  

6. கர்ஷயந்த: ஸரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:
மாம் சைவாந்த:ஸரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஸ்சயாந்  

யே ஜநா:-எந்த மக்கள், அஸாஸ்த்ரவிஹிதம்-நியமத்தை மீறி, தம்ப அஹங்கார ஸம்யுக்தா: - டம்பமும் அகங்காரமுமுடையராய், காமராக பல அந்விதா:-விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரம் தப: தப்யந்தே-கோரமான தவஞ் செய்கிறார்களோ.

ஸரீரஸ்தம் பூதக்ராமம் ச-உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும், அந்த:ஸரீரஸ்தம் மாம் ஏவ - அகத்திலுள்ள என்னையும், கர்ஷயந்த:-வருத்துகிறார்கள், தாந் அசேதஸ:-அந்த அறிவு கெட்டவர்கள், ஆஸுர நிஸ்சயாந் வித்தி= அசுர நிச்சய முடையோரென்றுணர்.

பொருள் : (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.

பொருள் : இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.

அசுர இயல்புடையவர்கள் புரியும் கொடுந்தவம் அவர்களுக்கே இன்பம் தருவதில்லை. முள்ளின்மீது படுத்துக்கிடக்கின்றனர்; கையைத் தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கின்றனர். பார்க்கின்றவர்களுக்கும் அக்காட்சி துன்பமளிக்கிறது. சூரியனையே உற்று நோக்குதல் போன்ற செயல்களால் இந்திரியங்களை அவர்கள் பாழாக்குகிறார்கள். மனதினுள் மனசாக்ஷியாக சர்வேசுவரன் வீற்றிருக்கிறார். சலனமடைந்த நீரில் சந்திர பிம்பம் நன்றாக விளங்காததுபோன்று பகட்டும், ஆணவமும், ஆசையும் நிறைந்துள்ள அவர்களது மனதில் ஈசுவர சான்னித்தியம் உணரப்படுவதில்லை. இறைவன் புறக்கணிக்கப்படுகிறார். இன்ப துன்பம் கடந்துள்ள அவர் துன்புறுத்தப்படுவர் போன்று காணப்படுகிறார். சான்றோர்கள் செல்லும் நெறி இதுவன்று. ஆதலால் இது சாஸ்திரத்துக்குச் சிறிதும் பொருந்தாது. இத்தகைய பாங்குடையவர்களே அசுரர் ஆவர்.

இன்னும் எவைகளைக்கொண்டு மக்களை வகைப்படுத்தலாம் என்று கேட்குமிடத்து அதற்கு விடை வருகிறது : (5-6)

7. ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஸ்ருணு  

ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி-ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும், த்ரிவித: பவதி - மூன்று வகைப்படுகிறது, ததா யஜ்ஞ: தப: தாநம்-அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும்,
தேஷாம் இமம் பேதம்-அவற்றின் வேற்றுமையைக், ஸ்ருணு-கேள்.

பொருள் : ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.

யக்ஞம் அல்லது யாகம் என்பது நாளடைவில் தேவாராதனை என்னும் வடிவெடுத்துள்ளது. முன்னாளில் தீ மூட்டி அதன்மூலம் நிகழ்ந்த வழிபாடானது காலக்கிரமத்தில் ஆலய வழிபாடாக மாறியிருக்கிறது.

8. ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா:  

ஆயு: ஸத்த்வ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி-உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி, விவர்தநா:, ரஸ்யா: ஸ்நிக்தா:-மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, ஸ்திரா: ஹ்ருத்யா: ஆஹாரா:-உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள், ஸாத்த்விகப்ரியா:-சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.

பொருள் : உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.

பிரீதியானது என்பது பசியை உண்டுபண்ணுவது என்றும், ஸ்திரமானது என்பது நெடுநேரம் தாங்குவது என்றும் பொருள்படும். சத்தில்லாத உணவு விரைவில் ஜீரணமாகிவிடுகிறது. அது உடலுக்கு பலம் கொடுக்காது. மற்று, ஜீரணம் பண்ணமுடியாத கடினமான உணவு ஜீரணக் கருவிகளைக் கெடுத்துவிடுகிறது. அதனால் ஆயுளும் குறைந்துபோம். இந்த உணவு வகைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுதல் இயல்பு. காலையில் உண்ணும் உணவு இலேசானதாக இருக்கவேண்டும். இரவில் உண்ட உணவில் பெரும் பகுதி தூங்கப்போகும்பொழுது ஜீரணமாயிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களில் உடலுக்குக் கதகதப்பைத் தரும் உணவை அருந்துதல் அவசியம். வெப்பம் நிறைந்த நாடுகளிலோ குளிர்ச்சி தருகிற உணவு வேண்டப்படுகிறது.

பகல் வேளையில் வேண்டியவாறு உணவு அருந்து, ஆனால் இரவில் அருந்தும் உணவைப் பெரிதும் குறைத்துவிடு.

9. கட்‌வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஸோகாமயப்ரதா:  

கடு அம்ல லவண தீக்ஷ்ண-கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும், அதிஉஷ்ண-அதிகச் சூடு கொண்டன, ரூக்ஷ விதாஹிந:-உலர்ந்தன, எரிச்சலுடையன, ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: - இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர், து:க ஸோக ஆமயப்ரதா:-இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.

பொருள் : கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.

நாவில் சுரீலென்று பாய்கிறது; கண் சிவந்து கண்ணீர் சொட்டுகிறது; நாசியில் நீர் வடிகிறது; தலை சுழல்கிறது; வயிறு எரிகிறது-இத்தகைய பாங்குடையவைகள் ரஜோகுணத்தை வளர்க்கும் உணவுகள். ஆயுளைக் குறைக்கும் தன்மை இவைகளிடத்தில் உண்டு.

10. யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்  

யத் போஜநம் யாதயாமம்-எந்த உணவு கெட்டுப் போனது, கதரஸம்-சுவையற்றது பூதி - அழுகியது, பர்யுஷிதம் ச-பழையது, உச்சிஷ்டம் ச-எச்சில் பட்டது, அமேத்யம் அபி-அசுத்தம், தாமஸப்ரியம்-தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

பொருள் : பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

மூன்று மணி நேரத்துக்கு முன்பு சமைக்கப்பட்ட உணவு யாமம் கழிந்த உணவாகிறது. ஆகையால் அது சுவையிழந்து விடுகிறது. மேலும் அது ஊசிப்போய் துர்நாற்றமெடுக்கிறது. முந்திய இரவு சமைத்தது பழைய உணவாகிறது. மற்றொருவர் உண்டு எஞ்சியிருக்கும் உணவு எச்சில்பட்டது அல்லது உச்சிஷ்டமானதாகிறது. இன்னும் சில உணவுகள் தீண்டுதற்கும் தகுதியற்றவைகளாகின்றன. தமோகுண இயல்புடையார் இத்தகைய உணவுகளை விருப்புடன் புசிக்கின்றனர்.

இனி, ஈசுவர ஆராதனையிலுள்ள மூன்று படித்தரங்கள் விளக்கப்படுகின்றன:

11. அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக:  

ய: விதித்ருஷ்ட:-எவர் விதிகள் சொல்லியபடி, யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ-வேள்வி புரிதல் கடமையென்று, இதி மந: ஸமாதாய-மனம் தேறி, அபலாகாங்க்ஷிபி: இஜ்யதே-பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ, ஸ ஸாத்த்விக:-அந்த வேள்வி சத்துவ குணமுடையது.

பொருள் : பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.

குழந்தையைப் பராமரிக்கும் தாய் கைம்மாறு கருதாது சேவையைத் தன் கடமையென்று செய்கிறாள். நல்லார் கடவுள் வழிபாடு செய்வது கைம்மாறு கருதியல்ல. கடவுளை வழிபடுவதே அவர்களது இயல்பு. அந்த ஆராதனை சாஸ்திர ஆணைக்கு முற்றும் ஒத்ததாயிருக்கிறது. சத்துவகுண மேலீட்டால் வரும் வேள்வி அத்தகையது. பாண்டவர் ஐவர் திரௌபதியுடன் வனவாசம் செய்தபொழுது அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள்  எண்ணிக்கையில் அடங்கா. தர்மமே வடிவெடுத்துள்ள தங்களுக்கு இத்தனை துன்பங்கள் ஏன் வரவேண்டும்? என்று திரௌபதியானவள் கணவன் தர்மராஜாவிடம் கேட்டாள். அதற்கு விடையாக தர்மராஜா பகர்ந்ததாவது:- தேவீ, தூரத்தில் தென்படும் ஹிமயமலையைப் பார். மகிமை நிறைந்த அதை நான் வணங்குகிறேன். துன்பம் ஒன்றையும் நான் அறியேன். இங்ஙனம் நல்லதை வணங்குவது அவரது இயல்பு ஆயிற்று.

சாத்விகம் நிறைந்தவர்களுடைய மனப்பான்மைக்கு இது சான்றாகும்.

12. அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்
இஜ்யதே பரதஸ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்  

து பரதஸ்ரேஷ்ட-பாரதரிற் சிறந்தாய்! தம்பார்தம் ஏவ ச பலம் அபி அபிஸந்தாய- ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு, யத் இஜ்யதே- வேள்வி வேட்கப் படுகிறதோ, தம் ராஜஸம் யஜ்ஞம் வித்தி-அது ராஜச வேள்வி என்று உணர்

பொருள் : பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!

கடையில் பண்டம் மாற்றுவது போன்று, தனது விருப்பத்தை நிறைவேற்றிவைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி வணங்குவது சிறந்த வழிபாடாகாது. தற்பெருமைக்காகவென்று பூஜைகள் பல செய்வாரும் உளர். தங்களை விளம்பரப்படுத்திகொள்வதற்காகத் தெய்வ வழிபாடு செய்கிறவர்களும் உண்டு. இவ்விருவித ஆராதனைகள் ரஜோ குணத்தினின்று உதிப்பவைகளாம்.

13. விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்
ஸ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே  

விதிஹீநம்-விதி தவறியது, அஸ்ருஷ்டாந்நம்-பிறர்க்குணவு தராததும், மந்த்ரஹீநம்-மந்திர மற்றது, அதக்ஷிணம்-தக்ஷிணையற்றது, ஸ்ரத்தாவிரஹிதம்-நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது, யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே-இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.

பொருள் : விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.

எந்த ஆராதனையில் குற்றமிருக்கிறதோ அது வேதநெறி வழுவியதாகும். அன்னதானம் எல்லா உயிர்களுக்குமிடையிலுள்ள தொடர்வை நிலைநாட்டுகிறது. அன்னம் வழங்காதவிடத்து வேற்றுமை பரவுகிறது. அதனால் கேடு விளைகிறது. நல்லெண்ணமில்லாத செயல் மந்திரமில்லாத செயல் எனப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாகவுள்ள எண்ணமே அதற்குச் சிறப்பளிக்கிறது. ஆழ்ந்த எண்ணமில்லாத வழிபாடு யந்திரம் செய்கிற செயலுக்கு ஒப்பாகிறது. கடவுள் வழிபாடு சம்பந்தமான கிரியைகளைப் பிரதிபலன் எதிர்பாராது செய்துவைப்பவர் புரோகிதர் ஆகிறார். புரோகிதர்க்கும் அறிவு ஒழுக்கமுடைய மற்றவர்க்கும் வழங்கும் பொருள் தக்ஷிணை எனப்படுகிறது. தக்ஷிணை வழங்காத வழிபாடானது பிறரைப் பொருள் படுத்தாதது எனவே அது வழிபாடாகாது. ஊக்கமின்றி, விசுவாசமின்றிக் கடனைக் கட்டுவது போன்று செய்யப்படும் காரியம் சிரத்தையற்றதாகிறது. இத்தனை குறைபாடுகளோடு கூடியதால் அந்த ஆராதனை கீழ்த்தரமானதாகிறது.

மனிதன் சிரத்தையோடு எதைப் பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணைபுரிகிறது. தவம் யாது என்பது இனி விளக்கப்படுகிறது.

14. தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஸௌசமார்ஜவம்
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே  

தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம்-தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், ஸௌசம் ஆர்ஜவம் ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச-தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை, ஸாரீரம் தப உச்யதே-இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

பொருள் : தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

தப: என்பது உலையில் உருக்குதல் என்று பொருள்படுகிறது. பூமியில் வெட்டிய தாதுக்களை உருக்கித் தூய உலோகங்களாக்கிறோம். துருப்பிடித்த உலோகங்களை உருக்கிப் புதியதாக்குகிறோம். அங்ஙனம் தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பிக்கிறான். மெய், மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களோடு கூடியவன் மனிதன். இம்மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அதன் விவரம் வருகிறது.

பரப்பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். பாரமார்த்திக வாழ்க்கையில் புதிய பிறவியெடுத்தவர்கள் பிராம்மணர். நல்வாழ்க்கையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பவர்கள் குருமார்கள். மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்களை வணங்குவது மேன்மையடைதற்கு உற்ற உபாயம். நீராடி உடலைத் தூயதாய் வைத்திருத்தல் வேண்டும். காயத்தைக்கொண்டு செய்கிற செயல்களெல்லாம் ஒழுக்கம் நிறைந்திருக்குமிடத்து அது ஆர்ஜவம் அல்லது நேர்மையெனப் பெயர் பெறுகிறது. சம்போகத்துக்குக் கருவியாயிருப்பது உடல். இந்திரியங்கள் வாயிலாக வரும் அவ் இன்பங்கள் துன்பங்களாகப் பிறகு பரிணமிக்கின்றன. போகம் என்னும் குறைவின்கண் சென்றழியாது யோகம் என்னும் நிறைநிலையில் தன்னைக் காப்பது பிரம்மசரிய விரதமாம். தேகத்தால் மற்ற தேகங்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பது அஹிம்சை உடலைக் கொண்டு செய்கிறபடியால் இவையாவும் ஒன்று சேர்ந்து சரீர சம்பந்தமான தவமெனப்படுகிறது.

15. அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே  

யத் அநுத்வேககரம் ஸத்யம் ச-சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, ப்ரியஹிதம்-இனியது, நலங் கருதியதுமாகிய, வாக்யம் ச-சொல்லுதல், ஸ்வாத்யாய அப்யஸநம் ஏவ-கல்விப் பயிற்சி, வாங்மயம் தப: உச்யதே-இவை வாக்குத் தவமெனப்படும்.

பொருள் : சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.

காயத்தால் அடித்துத் துன்புறுத்துவதைவிடக் கொடியது கடுஞ்சொல் சொல்லிக் காய்தல். தவசி ஒருவனுக்கு அது பொருந்தாது. சில வேளைகளில் உண்மையை உரைக்குங்கால் அது துன்பந்தருவதாகிறது. ஆதலால் பொய் பேசலாமாவென்றால் அது ஒண்ணாது. சத்தியத்தையே சொல்லவேண்டும். எப்போக்கில் சத்தியம் சொல்லவேண்டும்? ஏற்றுக்கொள்பவர்களுக்கு இன்பம் தருவதாய் அது இருத்தல் வேண்டும்.

மெய்ம்மையே மொழிந்து முகஸ்துதி செய்யலாமா? கடும் சொல்லைக் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் மிகக் குறைவு. இச்சகம் கேட்டு, இறுமாப்புற்றுக் கெட்டுப் போனவரோ பலர். ஆகையால் முகஸ்துதி மொழியலாகாது. கேட்கின்றவர்களுக்கு இதம் தரும் இன் சொற்களையே செப்புதல் வேண்டும்.

பரத்தினை சாக்ஷõத்கரித்த பெருமக்கள் பூரித்துப் பகர்ந்துள்ள ஆப்த வாக்கியங்களே வேதமெனப்படுகின்றன. இதை வேதாந்தமென்பது இன்னும் பொருத்தமுடையதாகும். வேத வேதாந்தம் எம்மொழியில் வேண்டுமானாலும் அமையலாம். அவை யாண்டும் அருள் நிறைந்திருக்கும். அத்தகைய சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதிப் பழகுவதால் சொல் சுத்தப்படுகிறது. பிறகு அது சாதகனது சொந்த அருள் மொழியாகவும் வடிவெடுக்கிறது. இங்குப் பகர்ந்துள்ள நான்கு பகுதிகளும் முறையாக அமையப்பெற்றதே வாக்கு மயமான தபசாகிறது.

16. மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:
பாவஸம்ஸுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே  

மந: ப்ரஸாத:-மன மகிழ்ச்சி, ஸௌம்யத்வம்-அமைதி, மௌநம்-மௌனம், ஆத்மவிநிக்ரஹ: - தன்னைக் கட்டுதல், பாவஸம்ஸுத்தி:-எண்ணத் தூய்மை, இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே-இவை மனத் தவமெனப்படும்.

பொருள் : மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத்தவமெனப்படும்.

சோர்வடையாது, குழப்பமடையாது, குதூகலத்தில் அமைதியுற்றிருத்தல் மனப்பிரசாத்மாம். சீரிய எண்ணங்களே உள்ளத்தில் உதிக்க இடந் தருதலும், கெட்ட எண்ணங்களை வரவொட்டாது தடுத்தலும், ஈசுவர சிந்தனை தைலதாரை போன்று ஊற்றெடுப்பதும் மௌன மெனப்படும். சொல்லிலும் செயலிலும் விடச் சிந்தனையில் தன்னடக்கம் பயிலுதல் சாலச்சிறந்தது. சிந்தனையில் அடக்கம் பழகியவனுக்கு வாயடக்கமும் மெய்யடக்கமும் தாமே வந்து அமைகின்றன. மனதில் உண்டாகிற உணர்ச்சி பாவமெனப்படுகிறது. வியவகார வேளையிலும் இந்த உணர்ச்சி தூயதாயிருத்தல் வேண்டும்.

17. ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே  

அபலாகாங்க்ஷிபி: யுக்தை: நரை:-பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால், பரயா ஸ்ரத்தயா தப்தம்-உயர்ந்த நம்பிக்கையுடன், தத் த்ரிவிதம் தப:-மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம், ஸாத்த்விகம் பரிசக்ஷதே-சாத்வீகமெனப்படும்.

பொருள் : பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.

பயனை விரும்புமளவு தவம் புனிதத்தை இழக்கிறது. பயன் விரும்பாதிருப்பதும், செய்யும் தவத்தை நிறுத்தாதிருப்பதும் சாத்விகர்களது போக்கு. வெற்றியே வாய்த்திடினும் தோல்வியே தோன்றிடினும் அவைகளால் அலக்கழிக்கப்படாதிருப்பவர்கள் யோகத்தில் உறுதிபெற்றவர்களாகின்றார்கள். அவர்களது பெரு முயற்சியோ ஒருபொழுதும் தளர்ச்சியடைவதில்லை. முக்கரணங்களைக் கொண்டு அவர்கள் முறையாகப் பாடுபடுகின்றனர்.

18. ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்  

யத் தப:-எந்த தவம், ஸத்காரமாநபூஜார்தம் ச ஏவ-மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்), தம்பேந க்ரியதே-ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய, இஹ ராஜஸம் ப்ரோக்தம்-தவம் ராஜசமெனப்படும், தத் அத்ருவம் சலம்-அஃது நிலையற்றது; உறுதியற்றது.

பொருள் : மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.

தவம் ஒன்றுதான் தங்களைத் தக்கவர்களாகத் திருத்தியமைக்கிறது என்ற தெளிவு ராஜஸ இயல்புடையவர்களுக்கு வருகிறதில்லை. வெறும் வெளி வேஷத்துக்காகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள். தவமுடையவர்களென்று மற்றவர்கள் தங்களைப் பாராட்டி வரவழைக்க வேண்டும்; போற்றிப் புகழவேண்டும்; வீழ்ந்து வணங்க வேண்டும் - இப்பாங்குடன் தவமிழைப்பவர் போன்று அவர்கள் நடிக்கின்றனர். பாசாங்காகச் செய்யும் அத்தவம் சில நாட்களுக்கு நடைபெறும். பிறகு அது இல்லாது மறைந்து போகும். செய்யும் பொழுதே அதில் உறுதிப்பாடு ஒன்றும் இராது. இப்பூவுலகில் மட்டும் அது பெயரையும் புகழையும் தற்காலிகமாகத் தருகிறது.

19. மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்  

யத் மூடக்ராஹேண-எந்த மூடக் கொள்கையுடன், ஆத்மந: பீடயா வா-தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு, பரஸ்ய உத்ஸாதநார்தம் க்ரியதே-பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய, தத் தப: தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தவம் தாமசம் எனப்படும்.

பொருள் : மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.

விவேகமில்லாதவர்கள் தவத்தின் உட்கருத்தை உள்ளபடி அறிகிறதில்லை. திரிவுபட அதைப் பொருள்படுத்துகிறார்கள். பட்டினி கிடந்து, உடலைக் குலைத்து, அதைத் தீயில் வாட்டி, நீரில் நனைத்துச் சிறிது சிறிதாகத் தற்கொலை செய்வது போன்று தங்களையே அவர்கள் துன்புறுத்திக்கொள்கிறார்கள். அல்லது ஏவல் முதலிய மாந்திரிகச் செயல்களால் பிறரை அழிக்க அவர்கள் முயலுகிறார்கள். அக்ஞான இருளில் தோன்றிய இத்தகைய தபசு தாமசமெனப்படுகிறது.

20. தாதவ்யமிதி யத்தாநம் தீயதேऽநுபகாரிணே
தேஸே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்  

தாதவ்யம் இதி யத் தாநம்-கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம், தேஸே காலே ச பாத்ரே ச-தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும், அநுபகாரிணே தீயதே - கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ, தத் தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்-அந்த தானம் சாத்வீகமென்பர்.

பொருள் : கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.

செய்த உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் எதிர்பார்ப்பது வியாபாரமாகிறது; அது தானமாகாது. தனக்குப் பயன்படும் பொருள் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டுமென்று மனமுவந்து கொடுப்பது தானம். கொடுத்த பொருள் யாரிடம் சென்றால் பலருக்குப் பெரிதும் பயன்படுமோ அவரே தகுந்த பாத்திரமாகிறார். ஒரு நாட்டிலிருப்பவர்க்கு வேறு ஒரு நாட்டிலுள்ள நிலம் அல்லது பொருளை தானம் பண்ணுவது தக்கவிடத்தில் செய்யப்பட்டதாகாது. இருக்குமிடத்திலேயே நன்கு பயன்படுவதே சிறந்த தானமாகிறது. பயன்படுத்துகிற காலத்துக்கு மிக முன்போ பின்போ கொடுப்பது காலத்தில் செய்த தானமாகாது. தக்க தருணத்தில் பயன்படும்படி தானம் செய்வதே மேலானது.

21. யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வா புந:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்  

து யத் பரிக்லிஷ்டம் ச-ஆனால் மன வருத்தத்துடன், ப்ரத்யுபகாரார்தம் வா-கைம்மாறு வேண்டியும், பலம் உத்திஸ்ய புந: தீயதே-பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ, தத் தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த தானத்தை ராஜசமென்பர்.

பொருள் : கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.

தானம் கொடுக்கும் விஷயத்தில் வலது கை செய்வதை இடது கை அறியலாகாது என்பது கோட்பாடு. அதாவது அவ்வளவு அடக்கத்துடனும் பணிவுடனும் ஊக்கத்துடனும் பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கவேண்டும். ரஜோகுணமுடையவனது பாங்கு இதற்கு முற்றிலும் மாறானது. ராஜஸ சுபாவமுடையவனுக்குத் தன் பொருளைப் பிறர்க்குக் கொடுக்க விருப்பமில்லை. வருத்தப்பட்டுக்கொண்டு அரை மனதோடு தானம் பண்ணுகிறான். அப்படிக் கொடுக்கும்பொழுதும் அது தனக்குப் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று எதிர் பார்க்கிறான். தான் ஒரு மடங்கு தானம் செய்தால் தெய்வம் தனக்குப் பத்து மடங்காகப் பலனைக் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறான். இது கொடுப்பவர் ஏற்பவர் ஆகிய இருதரத்தாருக்கும் துன்பம் விளைவிக்கிறது. ரஜோகுணமுடையவனிடத்து மற்றொரு மனப்பான்மையுண்டு. ஒரு பொது ஸ்தாபனத்துக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ அவன் ஏதாவது கைங்கரியம் செய்தால் அதைபற்றித் தனக்கு நிரந்தரமான விளம்பரம் வேண்டுமென்கிறான். தன்னுடைய பெயரை மிக முன்னணியில் பகட்டுடன் பொறித்து வைக்கவேண்டுமென்பது அவனுடைய விருப்பம். தன்னுடைய சொந்தப் பதுமையை அத்தகைய பொது இடங்களில் வைத்துப் பாராட்டவேண்டுமென்பதும் அம் மனிதனுடைய பெருவிருப்பமாகும். இனி, தேவாலயங்களில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்தப் பெயர் சொல்லி அர்ச்சனை பண்ண வேண்டுமென்று விரும்புகிறான். இத்தகைய விருப்பமும் ரஜோ குணத்தினின்று உதித்ததாம்.

22. அதேஸகாலே யத்தாநமபாத்ரேப்யஸ்ச தீயதே
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்  

யத் தாநம் அஸத்க்ருதம்-எந்த தானம் மதிப்பின்றி, அவஜ்ஞாதம்-இகழ்ச்சியுடன், அதேஸகாலே ச-தகாத இடத்தில், தகாத காலத்தில், அபாத்ரேப்ய தீயதே-தகாதர்க்குச் தரப் படுகிறதோ,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தானம் தாமசமெனப்படும்.

பொருள் : தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.

புனிதமற்றதும் வசிக்க உதவாததும் தகாத இடமாகிறது. தூங்கும் வேளை, உடலின் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் வேளை, வேறு அலுவல்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் வேளை-ஆகிய இவைகள் தானம் செய்தற்குத் தகாத காலங்களாம். ஒழுக்கம் கெட்டவர்கள், அடக்கம் பயிலாதவர்கள், பொதுநல சேவை செய்யாதவர்கள், பணத்தை வீண் விரயம் செய்பவர்கள் ஆகியவர்கள் தானத்துக்குத் தகுதியற்றவர்களாம். முகமலர்ச்சியோடு கூடி வரவேற்பும், உபசாரமும் இல்லாது போவதுமன்றி, புன் மொழிகளால் இகழ்ந்து பேசி, ஏற்பவர்களுக்கு மன வருத்தம் உண்டுபண்ணிக் கொடுக்கும் தானம் தாமசமானது.

ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்க உத்தியோகஸ்தர் போன்றவர்களின் வற்புறுத்தலுக்காக இணங்கிக்கொடுக்கும் தானம் தமோகுணமானது. லஞ்சம் அல்லது கைக்கூலி கொடுப்பதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு பொதுநலத்துக்கு நன்கொடை கொடுப்பதாக வெளிக்குக் காட்டிக்கொள்வது பொருத்தமான தானமாகாது. ஒழுக்கமின்மையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அத்தகைய தானம். அது தமோகுணத்தைச் சேர்ந்ததாகும்.

செய்கின்ற யக்ஞ, தான, தபக் கர்மங்களில் குற்றம் வாராது காப்பது எப்படி என்ற வினா எழலாம். அதற்கு விடை வருகிறது :

23. ஓம்தத்ஸதிதி நிர்தேஸோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா  

ஓம் தத் ஸத் இதி த்ரிவித:-ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக, ப்ரஹ்மண: நிர்தேஸ: ஸ்ம்ருத:-பிரம்மத்தைக் குறிப்பது என்பர், தேந புரா-அதனால் முன்பு, ப்ராஹ்மணா: வேதா: ச யஜ்ஞா: ச-பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும், விஹிதா:-வகுக்கப்பட்டன.

பொருள் : ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.

ஓம் தத் ஸத் என்ற மூன்று பெயர்களால் பிரம்மம் சர்வ சாதாரணமாக அழைக்கப்படுகிறது. மூன்றும் மூன்று குறிப்புப் பெயர்களாக அதற்கு அமைந்துள்ளன. அது ஓசையாகப் பரிணமிக்கிறது. ஓசையினின்று உலகெலாம் உண்டாகிறது. ஆதலால் அது நாதப்பிரம்மம் எனப்படுகிறது. ஓம் என்பது அகிலாண்டத்தின் ஓசையின் தொகை. ஓசையின் தொகை ஓம்கார சொரூபமாக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது. பிரணவம் என்றும் அதைப் பகர்வது உண்டு. ஆக, பிரம்மத்தை ஓம்கார வடிவினன் என்பது ஒவ்வும். கற்புடைய மாது ஒருத்தி தன் கணவனை அவர் என்று குறித்துச் சொல்லுகிறான். அங்ஙனம் ஞானிகள் அது என்று சொல்லும்பொழுதெல்லாம் பிரம்மத்தைக் குறிக்கிறார்கள் (தத்) என்னும் சொல் அது என்று பொருள்படுகிறது. பெரியபொருளைப் பெயரிட்டு அழையாது வெறும் தத் என்ற பதத்தால் வேதம் அதைப் பல்கால் குறிப்பிடுகிறது.

எது சத்தியமாயுள்ளதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் அடிபடாதிருப்பது பிரம்மம். எனவே அது ஸத் என்னும் பெயர் பெறுகிறது. ஆக, ஓம் தத் ஸத் என்பதன் பொருள் ஓசை வடிவமாயுள்ள அந்த பிரம்மமே மெய்ப்பொருள் என்பதாம்.

பாலினின்று மோரும் வெண்ணெயும் உண்டாகின்றனவெனினும் சிறந்தபொருளாகிய வெண்ணெயே பாலினின்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரம்மத்தினிடத்திருந்து அனைத்தும் உண்டாயின வெனினும் அவைகளுள் சிறப்பாயுள்ள அந்தணர், வேதம், வேள்வி முதலியன உண்டாயினவென்று சொல்லப்படுகின்றன. உயிர் வகைகளுள் சிறந்தவர்கள் செந்தண்மையே வடிவெடுத்துள்ள அந்தணர். அறிவைப் புகட்டும் நூல்களுள் சிறந்தவைகள் வேதம். செயல்களுள் புனிதமும் நல்லுணர்ச்சியும் நிறைந்தவைகள் வேள்வி அல்லது யக்ஞம். நாத பிரம்மமாகத் தோன்றியுள்ள பிரபஞ்சத்தில் இம் மூன்றும் முக்கியமானவைகளென்று குறிப்பிடப்படுகின்றன.

இம் மந்திரங்கள் எதற்கு உதவுகின்றனவென்று இனி இயம்பப்படுகிறது :

24. தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்  

தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாம்-ஆதலால், பிரம்மவாதிகள், விதாநோக்தா: யஜ்ஞ-விதிப்படி புரியும் வேள்வி, தாந தப: க்ரியா:-தவம், தானம் என்ற கிரியைகள், ஸததம் ஓம் இதி-எப்போதும் ஓம் என்று, உதாஹ்ருத்ய ப்ரவர்தந்தே-தொடங்கிச் செய்யப்படுகின்றன.

பொருள் : ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ஓம் என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.

குறைபாடில்லாத கர்மமில்லை. குறைபாட்டை முகாமையாகக் கொண்டு கர்மம் செய்யாமலிருக்க முடியாது. தேகமெடுத்தவன் கர்மம் செய்யாமலிருக்க முயற்சி பண்ணுவதும் பொருந்தாது. கர்மத்தில் உள்ள அக்குறைபாட்டைப் போக்குதற்குக் கர்மம் ஒவ்வொன்றும் ஓம் என்று உச்சரித்துக் கொண்டு துவக்கப்படுகிறது. அதாவது இயற்கையின் நடைமுறைக்கு ஒத்ததாக ஒவ்வொரு செயலும் இருக்கவேண்டும். இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. ஜீவர்களின் முன்னேற்றத்துக்கு அந்த ஒழுங்குப்பாடு துணைபுரிகிறது. அருள் நிறைந்த அந்தத் திட்டத்தை உணர்ந்து அதற்கேற்றபடி வினையாற்ற வேண்டும். இச்செயல் நாளடைவில் விக்கினேசுவர பூஜையாக வடிவெடுக்கலாயிற்று. விக்கினேசுவரனே ஓம்கார வடிவினன். செய்கிற வினை ஒவ்வொன்றிலுள்ள விக்கினத்தை நீக்குதற்கும், அதை வெற்றிகரமாக முடித்தற்கும் விநாயக வணக்கம் செய்யப்படுகிறது. ஓசையெல்லாம் ஓங்காரத்தில் ஒடுங்குவது போன்று தனித்த செயல்களெல்லாம் இயற்கைத் திட்டத்திற்கு ஒத்திருக்கவேண்டும். அப்பொழுது அது குறையின்றி நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரித்து ஒவ்வொரு கர்மத்தையும் துவக்குவதன் உட்கருத்து இதுவேயாம்.

25. ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:
தாநக்ரியாஸ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:  

தத் இதி-தத் என்ற சொல்லை உச்சரித்து, பலம் அநபிஸந்தாய-பயனைக் கருதாமல், விவிதா: யஜ்ஞதப:க்ரியா:-பல வகைப்பட்ட வேள்வியும் தவமும், தாநக்ரியா: ச-தானமுமாகிய கிரியைகள், மோக்ஷகாங்க்ஷிபி: க்ரியந்தே-மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

பொருள் : தத் என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

தத் என்று பிரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்ற பொழுது எல்லாம் அவன் உடைமை யென்றும், எல்லாம் அவன் செயல் என்றும் எண்ணம் வருகிறது. கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது தனக்கென்று செய்யப்படும்பொழுது அதில் தோஷம் அதிகரிக்கிறது. போர்புரிதல் போன்ற கர்மங்கள் கேடு நிறைந்தவைகளாகும். ஆனால் சில நெருக்கடியில் அத்தகைய கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும். உலக நடைமுறையில் ஈசனது பெருந்திட்டத்தை அறிபவன் அவை யாவும் ஈசன் செயல் என்று கருதி அவனுடைய ஆராதனையாக அச்செயலைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் கர்மபலன் தன்னுடையதாகாது என்கிற தெளிவு ஏற்படுகிறது; பரத்திலேயே நாட்டமதிகரிக்கிறது. அதனால் முமுக்ஷúத்வம் வந்தமைகிறது. பின்பு யக்ஞமும் தபசும் தானமும் அதற்கேற்ற சாதனங்களாக மிளிர்கின்றன.

26. ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே  

ஸத் இதி-ஸத் என்ற சொல், ஏதத் ஸத்பாவே-உண்மை யென்ற பொருளிலும், ஸாதுபாவே ச ப்ரயுஜ்யதே-நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது, பார்த-பார்த்தா, ததா ப்ரஸஸ்தே கர்மணி-புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும், ஸத் ஸப்த: யுஜ்யதே -ஸத் என்ற சொல் வழங்குகிறது.

பொருள் : ஸத் என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ஸத் என்ற சொல் வழங்குகிறது.

முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத பிரம்மமே ஸத் என்று சொல்லப்படுகிறது. பிரமமம் ஒன்றுதான் உள்ளது. பிரபஞ்சமும் அதிலுள்ள ஜீவர்களும் அஸத் என்றாலும் புத்திரன் பிறந்தால் அவனைக் குறித்துச் சிரஞ்சீவி என்கிறோம். நிலையற்ற உயிரை நிலையானதென்று சொல்லுவது உபசாரத்துக்காக. லௌகீக வாழ்க்கை முறையில் உண்மையல்லாததை உண்மை யென்று பாவித்தல் வேண்டும் என்ற கருத்துடன் ஸத் என்ற சொல் வழங்கப்படுகிறது.

சாது பாவம் என்பது நன்மையை வளர்க்கும் கருத்து. பிரம்மம் ஒன்றே நிர்தோஷம் அல்லது குற்றமற்றது. பாக்கி அனைத்திடத்தும் சிறிதளவாவது கேடு உண்டு. கேடு உடைய மனிதனைக் கெட்டவன் என்று சொல்லலாகாது. அவனை நல்லவன் என்றே சர்வகாலமும் சொல்லிக்கொண்டிருந்தால் நல்லவனாகி வருகிறான். சாது பாவம் உலகத்தைச் சீர்திருத்த உற்ற உபாயமாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான சிறந்ததொரு கோட்பாடு ஆகிறது. இதற்காகவும் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது.

இனி, ஸ்வஸ்தி வசனமும் ஸத் எனப்படுகிறது. மங்கள மல்லாததை மங்களமென்று சொல்லி மனதை ஒழுங்குபடுத்துதற்கு அது உதவுகிறது. பொய்யானதெல்லாம் பொருந்தியது நம் உடல். அதை மெய் யென்று மொழிகிறோம். மங்களம் வேண்டி அங்ஙனம் மொழிகிறோம். விவேகமுடையவர்க்கு விவாகத்தைவிடக் கொடியது ஒன்றுமில்லை யென்பது விளங்கும். மனிதனுடைய வீழ்ச்சிக்கு விவாகம் காரணம். அமங்களமான மணச்சடங்கை சுபகாரியம் என்கிறோம். அஸத் தை ஸத் என்கிறோம். மங்களமல்லாததை மங்களமாக்குதற்கு ஸத் என்ற சொல்லை வழங்குகிறோம்.

பொய்யானதும், கெட்டதும், பொருந்தாததுமான உலக வாழ்வை நித்தியமானதென்றும், நலம் நிறைந்ததென்றும், முற்றிலும் பயன்தர வல்லதென்றும் எண்ணுவது அவசியம். வாழ்வில் இனிமை காண்பதற்கு அது உற்ற உபாயமாகிறது. ஸத் என்னும் சொல் அத்தகைய மனநிலையை வருவிக்கிறது.

இன்னும் எதற்கெல்லாம் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது? விடை வருகிறது :

27. யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே  

யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஏவ-வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும், ஸத் இதி உச்யதே-ஸத் எனப்படுகிறது, ச ததர்தீயம்-மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்,
கர்ம ஏவ ஸத் இதி அபிதீயதே-கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.

பொருள் : வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ஸத் எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.

யாகம், தபசு, தானம் ஆகியவைகளை முறையாகச் செய்தால் அவைகள் இயல்பாகவே ஸத் என்னும் சொல்லுக்கு இலக்காய் இருக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். உயரமாக வீடு கட்டுதற்கு முதலில் மூங்கில், பலகை முதலியவைகளைக் கொண்டு சாரம் கட்டுகிறோம். வீடு கட்டுவது நிலைத்துள்ள செயல். சாரம் கட்டுவது நிலையற்ற செயல். அப்படியிருந்தும் சாரம் கட்டினால்தான் வீடுகட்ட முடியும். நிலைத்த செயலுக்குத் துணை புரிகின்றவளவு சாரம் கட்டுதல் இன்றியமையாத செயல் ஆகிறது. யாகம், தபசு, தானம் ஆகியவைகள் தம்மளவில் நிலைத்த செயல்கள் ஆகா. நிலைபொருளாகிய தெய்வத்தை அடைதற்கு அவைகள் பயன்படுகின்றனவாதலால் அவைகள் ஸத் கர்மங்கள் எனப்படுகின்றன. முறை தவறிச் செய்யப்படும் பொழுதும் ஸத் என்ற மந்திரத்தை உச்சரித்துச் செய்துவந்தால் அவைகளிடத்துள்ள குறைபாடுகள் நீங்கி அவைகள் நாளடைவில் நலம் பெறுகின்றன. அதற்கும் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். பத்ரிகாச்ரமம் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன் இந்தியாவின் தென்முகமாக நடந்து செல்வானானால் அது முறை தவறிய முயற்சி. தனது விருப்பம் ஹிமயமலையில் பத்ரிகாச்ரமம் போய்ச் சேர்வது என்று அவன் வழி நெடுகச் சொல்லி வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது விஷயம் தெரிந்த ஆள் ஒருவன் அவனுடைய செயலைத் திருத்தியமைக்கத் தோன்றி வருவான். தென் திசையை நோக்கிப் போகலாகாது. வட திசையை நோக்கிப் போகவேண்டும் என்ற ஆணை பிறக்கும். பிறகு அவன் பத்ரிகாச்ரமம் போய்ச் சேருவான். அங்ஙனம் கடவுளைக் குறித்துச் செய்யும் செயல் துவக்கத்தில் குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் திருத்தியமைக்கப் பெறுகிறது. தன் பொருட்டுச் செய்யும் கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது கேடுடையதாகிறது. கடவுள்பொருட்டுச் செய்யப்படும் கர்மம் எவ்வளவு குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் ஸத் கர்மமாய் மாறி மேன்மையுறுகிறது.

28. அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ  

பார்த-பார்த்தா, அஸ்ரத்தயா ஹுதம் தத்தம்-அசிரத்தையுடன் வேள்வியும் தானமும், தப்தம் தப: ச-செய்யும் தவமும், யத் க்ருதம்-கர்மமும், அஸத் இதி உச்யதே-அஸத் எனப்படும்,
தத் இஹ நோ ப்ரேத்ய ச ந-அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை.

பொருள் : அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், அஸத் எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;

யாகத்தையும் தானத்தையும் தபசையும் முறையாகச் செய்தால் பரபோதம் மேலிடுகிறது. ஜீவபோதம் தேய்கிறது. இச் செயல்களைச் சுயநலத்துடன் செய்தால் ஜீவபோதம் மேலும் வளர்கிறது. இயற்கையினின்று வருகிற இன்பங்களை அனுபவிப்பதற்கு ஜீவபோதம் வேண்டும். பரம்பொருளிடத்திருந்துவரும் பேரானந்தத்தை அனுபவிக்கப் பரபோதம் வேண்டும். சிரத்தையில்லாத மனிதனுக்கு ஜீவபோதமும் இல்லை; பரபோதமும் இல்லை.

சிரத்தையில்லாது செய்யும் கர்மம் எத்தகையதாயிருந்தாலும் அது எவ்வுலகுக்கும் பயன்படாது. கர்மம் செய்வதால் யந்திரங்கள் முன்னேற்ற மடைவதில்லை. அவைகள் ஒழுங்காக நன்கு உழைக்கின்றன. ஆனால் எப்பொழுதும் அவைகள் யந்திரமாகவே இருக்கின்றன. சிரத்தையில்லாத மனிதனும் யந்திரம் போன்று ஆய்விடுகிறான். யாகம், தானம், தபசு ஆகியவைகளுக்குப் புறம்பாயுள்ள மற்றக் கர்மம் என்று சொல்லுவது, தனியாக இவ்வுலகுக்கு மட்டும் பயன்படுகிற கல்வி, செல்வம், உடல்திட்பம் முதலியன அடங்கப்பெற்ற செயலாம். பொருள் சம்பாதிப்பதை அதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். சிரத்தையில்லாதவன் பொருள் சம்பாதிக்க முடியாது. தற்செயலாய் அவனுக்குப் பொருள் சேர்ந்தால் அவன் அதைக் காப்பாற்றமுடியாது. அதை அனுபவிக்கவும் அவனால் இயலாது. யாருக்கும் பயன்படாது அது விரயமாய்விடும். சிரத்தையுடன் செய்யப்படுகிற கர்மங்களெல்லாம் நன்மை பயக்கின்றன. சிரத்தையுடன் செய்யும் பொழுதே ஓம் தத் ஸத் என்று உச்சரித்துக்கொண்டு செய்தால். அம்மூன்று சொற்களுக்கும் அடிப்படையாகவுள்ள பரம் பொருளை நினைந்து செய்ததாகும். அதனால் கர்மங்களில் இயல்பாயுள்ள கேடுகள் நீங்கி நலம் நிறைகிறது. பரத்தைப்பெற அதுவே உற்ற உபாயமாகிறது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar