பதிவு செய்த நாள்
05
ஜூன்
2025
11:06
அயோத்தி; அயோத்தி ராமர் கோவில் முதல் தளத்தில் இரண்டாவது பிராண பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராஜா ராமரின் பிராண பிரதிஷ்டை விழா இன்று ஜூன் 5 வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகத்திற்குள் ராஜாராம் மற்றும் பிற தெய்வங்களை பிரதிஷ்டை செய்யும் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற முதல் பிராண பிரதிஷ்டையைத் தொடர்ந்து, இது இரண்டாவது நிகழ்வாகும். விழாவானது ஜூன் 3ம் தேதி தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிராண பிரதிஷ்டை இன்று ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வை ஆஞ்சநேய சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் நிகழ்ச்சியானாது இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. வேத மந்திரம் முழங்க ஹவனத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ராமர் மற்றும் சீதையின் சிலைகளின் கண் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமம், வழிபாடுகள் செய்யப்பட்டு பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
மூன்று நாள் விழாவை முன்னிட்டு அயோத்தியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் பக்தர்கள் ராம் லல்லாவின் வழக்கமான தரிசனத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. பிராண பிரதிஷ்டைக்காக லக்னோவிலிருந்து 62,000 பெட்டிகளில் பிரசாதம் வந்தள்ளது. கொண்டைக்கடலை மற்றும் மூங்டால் கலவையுடன் பர்ஃபி தயாரித்ததாக சப்பன் போக் வந்துள்ளதாக தலைவர் க்ஷிதிஜ் குப்தா கூறினார்.
ராம் தர்பார்; ராம் தர்பாரில், மாதா சீதாவின் சிலையுடன் ராமரின் சிலை இரண்டு அடி உயர வெள்ளை பளிங்கு சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றுடன், ஹனுமான் மற்றும் லட்சுமணன் சிலைகளும் அமர்ந்த நிலையில் உள்ளனர். அனைத்து சிலைகளும் சிம்மாசனமும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள வெள்ளை பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. கட்டிடக்கலை அடிப்படையில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது, கோயில் சுவர்களில் இந்து தெய்வங்களின் சிற்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ராம் தர்பார் 4.5 அடி உயரம் கொண்டது. ராமர் சிலைக்கு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட கிரீடங்கள், நகைகள் பதிக்கப்பட்ட பெல்ட்கள், எம்பிராய்டரி செய்யப்பட்ட அங்கி மற்றும் ஜரிகை மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் திவாரிக்கு தெய்வத்தின் உடையை வடிவமைக்கும் பணியை செய்துள்ளார்.
தளத்தின் புனிதத்தை பராமரிக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலின் முதல் தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாவது தளத்தில் அதன் பழமையான பதிப்பு உட்பட பல மொழிகளில் ராமாயணத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோயிலைத் திறந்து வைத்தார். "ஜனவரி 22 அன்று, ராமரின் பால ரூபத்திற்கு (குழந்தை வடிவம்) பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டது, இப்போது ராஜா ராம் சிலை பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என மகாமண்டலேஷ்வர் விஷ்ணு தாஸ் கூறினார்.