நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த இந்த கோயிலில், மே 31 காலை நந்தி கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்து அருள்பாலித்து வந்தனர். இன்று காலை 6ம் திருநாளில் திருஞான சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர், ஜூன் 7ம் தேதி காலை இந்திர விமானத்தில் நடராஜர் புறப்பாடு நடந்து, திருமுறை பட்டயம் வாசித்தல் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு திரு உடல் தீர்த்தல் நிகழ்வு நடக்கிறது. ஜூன் 8 காலை 9:00 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வருகின்றனர். ஜூன் 12 உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.