பதிவு செய்த நாள்
06
ஜூன்
2025
11:06
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் புவனேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வேதமந்திரங்கள் முழங்க தவத்திரு ப்ரணவநந்த சுவாமிகள் தலைமையில், விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்வார்கள்.
புதுக்கோட்டை கீழ 7ம் வீதியில், ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. இங்கு ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன், அஷ்டபுஜ துர்காதேவி, பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த, அதிஷ்டானம் பல கோடி ரூபாய் செலவில் முழுவதும் கல்ஹாரமாக (கற்கோவில்) கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. கோவில் பாலாலயத்தை முக்தியடைந்த தவத்திரு ஓங்காரநந்த சுவாமிகள் முன்னிலையில் சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் தொடங்கி வைத்தார். பின், திருப்பணிகள் அதிஷ்டான பீடாதிபிதி தவத்திரு ப்ரணவாநந்த சுவாமிகள், அதிஷ்டான செயலாளர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் மேற்பார்வையில் திருப்பணிகள் நிறைவு பெற்றன.
தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் 3ம் கால யாக பூஜையின்போது காணொலி காட்சி வாயிலாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஆன்மீக மடாதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.