சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்ற நிலையில் தினமும் மாளிகைப்புறத்தம்மன் சன்னிதானம் முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சபரிமலையில் நேற்று முன்தினம் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றது. எனினும் வரும் 19-ம் தேதி வரை பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் இரவு 9 .30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் சன்னிதானம் முன்பு எழுந்தருளுகிறார். மாளிகைப்புறத்தம்மன், ஐயப்பனை திருமணம் செய்வதற்கான வேண்டுதலுடன் செல்வதாக ஐதீகம். 17-ம் தேதி வரை இந்த பவனி நடைபெறுகிறது.
கன்னி ஐயப்பன் சபரிமலைக்கு வராத ஆண்டில் திருமணம் செய்வதாக ஐயப்பன் கூறியதன் பேரில், 18-ம் தேதி சரங்குத்திக்கு மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளுவார். அங்கு கன்னி ஐயப்ப பக்தர்கள் வந்ததன் அடையாளமாக மலை போல் குவிந்துள்ள சரக்கோலை கண்டு ஆரவாரம் இல்லாமல் கோயிலுக்கு திரும்புவார். கடந்த ஆண்டு இந்த பவனிக்காக வந்த யானை தாக்கி ஒரு பெண் பக்தர் இறந்ததால், மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மாளிகைப்புறத்தம்மன் விக்ரகத்தை பூஜாரிகள் சுமந்து வந்தனர். இன்று முதல் 19-ம் தேதி வரை படிபூஜை நடைபெறும். மாலையில் தீபாராதனைக்கு பின்னர் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் இந்த பூஜை நடைபெறும். வரும் 18-ம் தேதி காலை 10 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். 19-ம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு தரிசன வசதி உண்டு. அன்று இரவு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும்.