ராகவேந்திராசுவாமிகள் ஜீவசமாதி அடைந்த திருத்தலம் மந்திராலயம். ஆந்திராவில் மாஞ்சாலா என்னும் இடத்தில் உள்ள இக்கோயில் பிருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது. ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் பிரவேசிக்க ஆயத்தமான போது, அவருடைய சீடர் அப்பண்ணாச்சாரியார் மடத்தில் இல்லை. குருவின் கட்டளைப்படி பிஞ்சலா என்னும் இடத்திற்குச் சென்றிருந்தார். ஆனால், குருவின் பிருந்தாவனப்பிரவேசத்தை அறிந்து பதட்டத்துடன் ஓடி வந்தார். வழியில் துங்கபத்ராநதி பெருவெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. எதிர்க்கரையில் நின்று கண்ணீர் மல்கி, ஸ்ரீ பூர்ண போத குருதீர்த்த... என்னும் கீர்த்தனையைப் பாடினார். சீடரின் குருபக்திக்கு நதி கட்டுப்பட்டு நீர் விலகி வழி ஏற்பட்டது. பிருந்தாவனத்திற்கு அப்பண்ணாச்சாரி வந்தபோது கற்பலகையை வைத்து மூடிவிட்டனர். அப்போதும் அவர் அந்தப் பாடலை மீண்டும் உருக்கத்துடன் பாடிக் கொண்டு அழுதார். அப்பாடலை இன்றும் பகல்நேர பூஜையின் போது மந்திராலயத்தில் பாடுகின்றனர். மந்திராலயத்து மண்ணை மிதித்தால் துன்பம் யாவும் விலகிஓடும் என்பது ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கை.