பதிவு செய்த நாள்
30
ஜன
2017
12:01
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று, தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலையில், உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய விழாவில் ஒன்றான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. காலை, 7:30 மணியளவில், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளினார். பின், காலை 8:00 மணியளவில், தேரோட்டம் துவங்கியது. தேரடி, பஜார் வீதி வழியாக தேர் உலா, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. உற்சவர் வீரராகவ பெருமாள், மாலை வரை தேரில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவு 10:30 மணிக்கு, கோவிலுக்கு சென்றார். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று, மாலை 3:00 மணிக்கு திருப்பாதம்சாடி திருமஞ்சனமும், இரவு 8:00 மணிக்கு குதிரை வாகனமும் நடக்கிறது.