தைப்பூச சிறப்பு ரயில்கள் இயக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2017 12:01
பழநி: பழநி தைப்பூச விழாவையொட்டி குவியும் பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். தைப்பூச விழா பழநியில் பிப்.,3 முதல் பிப்.,12வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவையொட்டி தென் மாவட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் போக்குவரத்து வசதிக்காக ஆண்டுதோறும் அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ரயில் சேவையை பொறுத்தமட்டில் பஸ்சைவிட கட்டணம் குறைவே. மதுரைக்கு ரூ.30 என்பதால், பக்தர்கள் ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். பழநி வரை இயக்கப்பட்ட ரயில்கள் பொள்ளாச்சியிருந்து - பழநி-சென்னை, மதுரைக்கும், பாலக்காட்டில் இருந்து திருச்செந்துாருக்கும் இயக்கப்படுகிறது. பழநிக்கு முன்பிருந்தே பயணிகள் அதிகம் வருவதால் பழநி பக்தர்கள் இடம் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர். எனவே, பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக தைப்பூச விழா நாட்களில் பழநி-மதுரை, திருச்செந்துாருக்கு கூடுதலாக ரயில்கள் இயக்கலாம். இயலாத நிலையில், கூடுதல் பெட்டிகளாவது இணைக்க வேண்டும். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,“கடந்த ஆண்டு தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதைப்போல இவ்வாண்டும் சிறப்பு ரயில் எந்த நாட்களில் இயக்குவது என்ற விபரம் விரைவில் தெரிவிக்கப்படும்” என்றார்.