பதிவு செய்த நாள்
31
ஜன
2017
12:01
திருப்பூர் : காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா, நாளை துவங்குகிறது. முக்கிய நிகழ்வான, தேரோட்டம், பிப்.,10 முதல், 12 வரை நடக்கிறது.
காங்கயம் அருகேயுள்ள சிவன்மலையில், பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தைப்பூசத்தேர்த்திருவிழா, நாளை துவங்குகிறது. நாளை இரவு, 9:00 மணிக்கு, வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றம்; 2ம் தேதி, வீரகாளியம்மன் திருவுலாக்காட்சியும்; 3ம் தேதி, வீரகாளியம்மன் தேர்த்திருவிழா, கிராம சாந்தி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.வரும், 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு, வீரகாளியம்மன், மலைக்கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.வரும், 9ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 10ம் தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம்; காலை, 6:00 மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும்; 11, 12ம் தேதிகளில், மலையை திருத்தேர் வலம் வருதலும் நடக்கிறது.பிப்., 15ல், பரிவேட்டை, தெப்ப உற்சவம்; 16ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, மகா தரிசனம்; 19ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மலையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியுடன், தைப்பூசத் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.