பதிவு செய்த நாள்
24
அக்
2011
10:10
திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயிலில் வரும் 26ம் தேதி கந்தசஷ்டி திருவிழா துவங்குவதை முன்னிட்டு சூரசம்ஹார விழாவின் போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பாதுகாப்பிற்காக ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் கண்காணிப்பு திருட்டுபயம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.அறுபடை வீடுகளில் முக்கியமானது திருச்செந்தூர். இது இரண்டாவது படை வீடாகும். சுமார் 2000 ஆண்டு பழமை வாய்ந்த திருத்தலம் திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் விசாகம், ஆவணி, மாசி திருவிழா உட்பட பல திருவிழாக்கள் நடந்த போதிலும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வரும் 26ம் தேதி தீபாவளி அன்று கந்த சஷ்டி திருவிழா துவங்குகிறது. 31ம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹார விழாவையொட்டி கோயிலில் அடிப்படை வசதிக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது, கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 26ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. விஸ்வரூப தீபாராதனை 1.30 மணிக்கும், 2.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேக பூஜையும் நடக்கும். காலை 6.30 மணியளவில் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. மற்றகால பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றது. 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.31ம் தேதி சூரசம்ஹாரம் அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பும், 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. மாலை 4.35 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. 1ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை கலையரங்கிலும், வேள்வி சாலையிலும் தேவார திருமுறை இன்னிசை நடக்கும். மேலும் விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக கனமழைபெய்தாலும் ஒழுகாத 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கலையரங்கம் பின்பக்கமும், கோபுரவாசல் அருகில் யாகசாலை நடந்த இடத்திலும் இரும்புசீட் போட்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி யாகசாலை பூஜையை பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்யும் வகையில் கோயில் வளாகங்களிலும், கோயில் உள்பிரகாரங்களிலும், 20 பிளாஸ்மா டிவி அமைத்து யாகசாலை பூஜை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சூரசம்ஹாரம் அன்று கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரத்தை நடக்க முடியாதவர்கள், முதியோர்கள், பெண்கள் சுலபமாக காண்பதற்கு வசதியாக 20அடி அகலமும், 10 அடி உயரமும், பகலிலும் தெரியக்கூடிய இரண்டு எல்சிடி டிவிக்கள் ஒன்று வேலவன் விடுதியிலும், மற்றொன்று ஜெயந்திநாதர் விடுதியிலும் வைக்கப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி சுலபமாக நேரடி ஒளிபரப்பு மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சியை காணலாம். அதுமட்டுமல்லாது விடுதி வளாகங்களிலும் டிவி மூலம் நேரடியாக சூரசம்ஹாரம் மற்றும் யாகசாலை பூஜைகள் ஒளிபரப்பப்பட உள்ளது. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் உள்ளே 175 பாந்துகள் அனுமதிக்க பட உள்ளது. இதில் ஏ வகுப்பு பாந்துகளில் ஐந்து நபர்களும், பி வகுப்பு பாந்துகளில் இரண்டு நபர்களும் அணுமதிக்கப்படுவர். மேலும் அவர்களுக்கு போட்டோவுடன் கூடிய ஐடி கார்டுகள் வழங்கப்படும். கோயில் உள்ளே பக்தர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குளிர்சாதன வசதியுடன் 4 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் 11 இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் மூலமும், 10 இடங்களில் நல்லிகள் மூலமும் ஆத்தூர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சூரசம்ஹாரம் அன்று 5 லட்சம் லிட்டர் குடிநீரும், மற்ற நாட்களில் 3 லட்சம் லிட்டர் குடிநீரும் தருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விடுதிகளில் எவர்சில்வர் ட்ரம்களிலும் குடிநீர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 131 நவீன இலவச டாய்லெட்கள் உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிக்க வசதி உள்ளது. கோயில் பஸ் ஸ்டாண்ட், ஜெயந்திநாதர் விடுதி அருகில், பவர் ஹவுஸ் பின்புறம் ஆகிய இடங்களில் இந்த டாய்லெட்கள் உள்ளது. சுகாதார வசதிக்காக 330 சுகாதார பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பக்தர்கள் சாப்பிட்டு போடும் இலை முதற்கொண்டு உடனுக்குடன் அகற்றி சுத்தமாக வைத்து பணிபுரிந்து வருகின்றனர். டாய்லெட் கழிவுநீரை உடனுக்கடன் வெளியேற்ற கழிவுநீர் டேங்கர் லாரி ஒன்று வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கழிவுநீரை எடுத்து ஊருக்கு வெளியே கொண்டு விடப்படுகிறது. மேலும் 9.5 லட்சம் மதிப்பில் குடிநீர் லாரி ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது. கோயில் வளாத்தில் 24 மணி நேரம் செயல்படக் கூடிய ஆம்புலென்ஸ் ஒன்றும், செந்தில் ஆண்டவர் விடுதியில் 24 மணி நேர பணியில் மருத்துவ குழு ஒன்றும் செயல்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 12 இடங்களில் கண்காணிப்பு டவர் அமைக்கப்பட உள்ளது. இதில் இருந்து போலீசார் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் நபர்களை நோட்டமிட்டு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை கண்டு மகிழலாம். சூரசம்ஹார நிகழ்ச்சியில் கோயில் மூலம் நேரடி வர்ணனைகள் நடக்கவுள்ளது. மஹா மண்டபம் முழுவதும் ஏர்கண்டிஷனர் வசதி செய்யப்பட்டுள்ளது. கடலில் குளிக்கும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மீன் வளத்துறை மூலம் படகுகளில் ரோந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் பக்தர்கள் தைரியமாகவும், சுகாதாரமாகவும் அமர கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டு புழுதி உண்ணிகள் அழிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க சூரசம்ஹாரம் அன்று வி.வி.ஐ.பி, விஐபி, அட்டைபாஸ் முதலியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் பக்தர்கள் நெரிசல் இன்றி சூரசம்ஹாரம் காணலாம். சஷ்டிக்காக 30லட்சம் செலவில் டூரிஸம் போர்டுடன் இணைந்து 200 அடி நீளம் 25 அடி அகலத்தில் வெயிட்டிங் செட்டும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலா 36 நவீன டாய்லெட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டால் மின்சாரத்திற்காக தயார்நிலையில் 500 கேவி ஜெனரேட்டர் இரண்டு உள்ளது.இதன் மூலம் கோயில் வளாகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். சூரசம்ஹாரம் அன்று வாகனங்களில் வருபவர்களுக்கு பச்சைநிற பாஸ் மற்றும் காவி நிற பாஸ் வழங்கப்பட உள்ளது. இதில் பச்சைபாஸ் நாழிக்கிணறு வரையிலும், காவி பாஸ் தாலுகா அலுவலகம் வரையிலும் செல்லலாம். மேலும் சிறப்பு ரயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமாரி, விடுதி மேலாளர் சிவநாதன், உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.