பதிவு செய்த நாள்
18
பிப்
2017
06:02
ஓசூர்: ‘பாகலுார் அருகே, அழிவின் விழிப்பில் உள்ள, 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால கோவிலை சீரமைக்க வேண்டும்’ என, வரலாற்று தேடல் குழவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே பாகலுாரில் இருந்து, மாலுார் செல்லும் சாலையில் உள்ள மேல்சூடாபுரம் பகுதியில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த, சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஏகம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் கருவறை, அதையொட்டிய அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம், வரலாற்றை தாங்கி நிற்கின்றன. கருவறையின் மீது இருந்து, கோபுரத்தின் உச்சி வரை, கருங்கல் மூலம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சோழர் கால வரலாற்றின் முக்கிய நினைவு சின்னமாக உள்ள ஏகம்பரேஸ்வரர் கோவில், தற்போது அழிவின் விழிப்பில் உள்ளது.
இதுகுறித்து, வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த அறம் கிருஷ்ணன் கூறியதாவது: ஏகம்பரேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மதில் சுவர், பாதிக்கும் மேல் இடிந்த நிலையில் உள்ளது. கோவில் முழுவதும், மரம், செடி படர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. கோவிலில் மொத்தம், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில், இரு கல்வெட்டுகளை தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. இரு கல்வெட்டுகளில், சோழ மண்டலங்களை பற்றிய குறிப்பு உள்ளது. மற்றொரு கல்வெட்டில், ஓய்சாளர்களின் கடைசி அரசானான, மூன்றாம் வல்லாளன் கொடுத்த தானங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. கி.பி. 1301ல், மன்னன், மூன்றாம் வல்லாளன் அரசாணை ஒன்றை வெளியிடுகிறான். அதில், அளேகுந்தாணி ராஜ்ஜியத்தில் உள்ள, விரிவிநாடு, மாசந்திநாடு, சொக்கன்பற்று, இலைப்பக்க நாடு, ஜம்புழு கூர்நாடு, குவளநாடு, முன்னான நாடு போன்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் வரித்தொகையை, அந்தந்த நாட்டில் உள்ள கோவில் வழிபாட்டிற்கும், அமுது படைக்கவும் செலவிடுமாறு, கோவில் மடாதிபதிகளுக்கு ஆணை பிறக்கப்பட்டுள்ள செய்தியை கல்வெட்டு விளக்குகிறது. வரலாற்றை தாங்கி நிற்கும் சோழர் கால ஏகம்பரேஸ்வரர் கோவிலை, மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.