பதிவு செய்த நாள்
23
பிப்
2017
10:02
காங்கேயம்:சிவன்மலை, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுவதால், தடைபட்ட அனைத்து மங்கள காரியமும் கை கூடும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடக்க இருப்பதை முன் கூட்டியே உணர்த்தும் விதமாக, ஆண்டவர் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து தனக்கு இந்த பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி, தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். பின், கோவிலில் பூ வைத்து சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.
இந்நிலையில் நாகபட்டினம், சடையப்பர் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் கனவில் மஞ்சள், குங்குமம் உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நேற்று இருந்து மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது குறித்து, கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது: ஆண்டவர் உத்தரவு பெட்டியில், எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அது சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து நல்ல காரியத்திற்கும் முதலில் எழுதுவது மஞ்சள், குங்குமம் தான். நாட்டில் அனைத்து மங்கள காரியமும் நடைபெறும். போக போக தான், சமுதாயத்தில் இதன் தாக்கம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டினம், சடையப்பர் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் கூறியதாவது: கடந்த, 19 அன்று என் கனவில் முருகன் தோன்றி, என் சன்னதியில், இரும்பு சங்கிலி வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்று உள்ளது, அதில், மஞ்சள், குங்குமத்தை வை என்று கூறினார். இதையடுத்து, நாகபட்டினத்தில் உள்ள சிவன் கோவில் சிவாச்சாரியர் ஒருவரிடம், இது பற்றி கேட்டேன். அவர், இது போன்று கோவில் இங்கில்லை, திருப்பூர் மாவட்டத்தில் தான் உள்ளது என்றார். இதன்பின், சிவன்மலைக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.