பதிவு செய்த நாள்
03
மார்
2017
10:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி திருத்தேர் விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 24 ஆம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அமாவசையன்று மயான கொள்ளையும், 28 ம் தேதி மாலை தீமிதி விழாவும் நடந்தது.
முக்கிய விழாவான திருதிதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் பித்து பிடித்து காடு, மலைகளில் அலைந்து திரியும் சிவபெருமன் மகா சிவராத்திரியன்று மேல்மலையனுார் மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் இங்கு நடக்கும் மயானக்கொள்ளையின் போது விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மன் பிம்ம கபாலத்தை ஆட்கொள்கிறார். இதன் பிறகு சிவபெருமான் சாபவிமோசனம் பெற்று ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மயானக்கொள்ளையன்று விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனின் கோபம் தனிவதற்காக தேவர்கள் தேரின் பாகங்களாக இருந்து விழா அம்மனுக்கு எடுக்கும் விழாவையே மேல்மலையனுாரில் ஆண்டு தேறும் தேர் திருவிழாவாக நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவில் வடம் பிடித்து அம்மனை தரிசிப்பவர்களுக்கு அங்காளம்மனின் அருள்மட்டுமின்றி அனைத்து தேவர்களில் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இன்று மாலை 4.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தேரில் ஏற்றினர். 4.40 மணிக்கு வடம் பிடித்தல் துவங்கியது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரியில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தேர் பவனியின் போது நேர்த்திகடன் செலுத்த காய்கனிகள், தானியங்கள், நாணயங்கள், உணவு பொருட்கள், பழங்களை பக்தர்கள் தேரின் மீது வாரி இறைத்தனர். விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாஜிஸ்ட்ரேட் சுதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, வேலுார், கடலுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.