பதிவு செய்த நாள்
18
மார்
2017
12:03
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் பெருமாள் கோவிலில் நேற்றுமுன்தினம் சுவாதி திருமஞ்சனம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்து உள்ளது நரசிங்கபுரம். இங்கு, பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மாதந்தோறும், பெருமாள் பிறந்த சுவாதி நட்சத்திரத்தில், மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம், நெய் தீபம் ஏற்றி, கோவிலை, 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி, பெருமாளை தரிசனம் செய்வர். அதன்படி, இம்மாத சுவாதி திருமஞ்சனம் நேற்று முன்தினம் நடந்தது. காலை, 5:30 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின், யாகபூஜையுடன் திருமஞ்சனம் நடந்தது. மாலை, உற்சவர் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலாவும் நடந்தது.