பதிவு செய்த நாள்
23
மார்
2017
11:03
நாமக்கல்: ஒரு மனிதன், மனிதனாக வாழ ஆன்மீகம் வேண்டும், என, சிருங்கேரி சாரதாபீட மடாதிபதி ஸ்ரீவிது சேகர பாரதீ சுவாமிகள் பேசினார். கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதாபீட மடாதிபதிகள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், ஸ்ரீவிது சேகர பாரதீ சுவாமிகள், சேலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வந்தனர். தொடர்ந்து, நாமக்கல் விஜயம் செய்தனர். முன்னதாக, நாமக்கல் - சேலம் சாலை, அம்பாள் ஆட்டோ வளாகத்தில், பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது. அங்கிருந்து, ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள முல்லை மஹாலுக்கு அழைத்து வரப்பட்டனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கி, ஸ்ரீவிது சேகர பாரதீ சுவாமிகள் பேசுகையில், ஆன்மீகம் வளர அனைவரும் பாடுபட வேண்டும். ஒரு மனிதன், மனிதனாக வாழ ஆன்மீகம் வேண்டும். கடவுளை நமக்கு காட்டுபவர் குரு. எனவே, கடவுள் பக்தியுடன் குரு பக்தியும் வேண்டும், என்றார்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் பேசுகையில், நாம் செய்வது எதுவுமில்லை. நல்ல காரியத்தை துவக்கினால், அதை செய்து முடிப்பதற்கான சக்தியை கடவுள் நமக்கு அளிப்பார் என்ற நம்பிக்கை வேண்டும், என்றார். இதையடுத்து, சுவாமிகளின் திருக்கரங்களால், சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடந்தது. இன்றும் (மார்ச் 23), காலை, 7:30 மணிக்கு, நாமக்கல் முல்லை மஹாலில், சந்திர மவுலீஸ்வர பூஜை நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், பகல், 12:00 மணிவரை, சுவாமிகள் தரிசனம், பிஷாவந்தனம், பாத பூஜைகள், பலமந்த்ராக்ஷதை பூஜைகள் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, சுவாமிகள் தரிசனம் முடித்து, நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுச் செல்கிறன்றனர்.