ஒரு பக்தர்: பகவானே தங்களைப் போன்ற மகான்களால்தான் வாழ்க்கையின் பிடியினின்றும் விடுபட இயலும்; எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அது சாத்தியமா? பகவான் ரமணர்: எனக்கு அது சுலபம் என்றால் உனக்கு ஏன் அது சுலபமாக இருக்கக்கூடாது? பக்தர்: தாங்களோ ஜீவன் முக்தர். நானோ மிகச் சாதாரணமானவன். பகவான்: நீ ஏதாவது பாரத்தைத் தூக்க முடியாமல் தவித்தால் என்ன செய்வாய்?
பக்தர்: நான் பிறர் உதவியை நாடுவேன்.
பகவான்: அதேபோலதான். நீ கடவுளிடம் சரணடைந்து அவருடைய உதவியை நாடு.
பக்தர்: என்னால் அது சாத்தியமா? இன்று சரணாகதி என்பேன். ஆனால் நாளைக்கு எனது அகங்காரம் தலைதூக்குமே.
பகவான்: அப்படியானால் ஒன்று செய். கடவுளிடம் உன்னைச் சரணடையச் செய்வதற்கு உதவி கேட்டுப் பிரார்த்தனை செய். இல்லை என்றால் உனக்கு ஏற்படும் துன்பங்களைச் சகித்துக் கொள்ளத் தயார் செய்து கொள்.