பழநியில் பஞ்சமிர்தம் தயாரிக்க குவிந்த 120 டன் மலை வாழைப்பழம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2017 06:04
பழநி: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழநிகோயிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க, 120 டன் மலை வாழைப்பழங்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளது. பழநி பங்குனி உத்திர விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தீர்த்தகாவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலைவாழை, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைப் பழங்களை வாங்குகின்றனர். இந்தாண்டு மைசூர் குடகு மலை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைப் பழங்கள் 120 டன் வரை வந்து குவிந்துள்ளது. இந்தாண்டு அதிக வரத்துள்ளதால் பழங்களின் விலை உயரவில்லை. கடந்தாண்டு குடகுமலை ஒரு பழம் ரூ.4 முதல் ரூ.6 வரையும், சிறுமலை பழம் ஒன்று ரூ.4 முதல் ரூ.8வரையும் விற்பனையானது.
இந்தாண்டு குடகு ரூ.5 வரையும், சிறுமலைப் பழம் ரூ.7வரையும் விற்கப்படுகிறது. 20 முதல் 100பேர் வரை குழுக்களாக வரும் பக்தர்கள் வாழைப் பழங்களை மொத்தமாக வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். வியாபாரி யுவராஜா கூறுகையில், இவ்வாண்டு வாழைப்பழம் வரத்துள்ளதால் கர்நாடக மாநிலம் குடகுமலை வாழை மட்டும் 29 லட்சம் காய்கள் வந்துள்ளன. சிறுமலை வாழை 5லட்சம் காய்கள் வந்துள்ளது. விலை குறைவென்பதால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.