பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. உடுமலை நகரின் மையத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில். மூல விக்ரகத்தின் முன்பு சுயம்பு உருவாகிய சிறப்பு பெற்ற தலமாக இக்கோவில் உள்ளது.
கோவிலில் ஆண்டுதோறும், விமர்சையாக திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, மார்ச் 28 ல், நோன்பு சாட்டப்பட்டது. திருக்கம்பம் நிலைநாட்டுதல் செய்த பிறகு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் இன்று நடக்கிறது. காலை 6:00 மணிக்கு மேல், மகாசக்தி மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, மாலை 4:15 மணிக்கு மேல், திருத்தேரோட்டம் நடக்கிறது. கோவில் வளாகத்தில் துவங்கி, பழநி ரோடு, தளி ரோடு, குட்டை திடல், தலகொண்டம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக, தேர் வலம் வந்து நிலை நிறுத்தப்படுகிறது. இதற்காக, எட்டு அடுக்குகளுடன் தேர் நேற்று அலங்கரிக்கப்பட்டது. தேர்ச்சக்கரங்களில், வர்ணம் பூசப்பட்டு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வடம் பிடித்து இழுக்கும் பக்தர்களுக்கு உதவ, கேசவன் என்ற யானை கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. தேரோடும் வீதிகளில் நெரிசலை தவிர்க்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
திருக்கல்யாணம்: திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நேற்று காலை மாவிளக்கு எடுத்து வந்து பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். மாலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, நடந்த திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நகரில் பிரசித்தி பெற்ற பாரம்பரியமான தேரோட்டத்துக்காக அரசுத்துறைகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.