பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
11:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின் ராஜகோபுர பணிகள் நிறுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு துவங்கிய நிலையில், மணல் தட்டுப்பாடு காரணமாக, நான்காவது முறையாக மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருத்தணி முருகன் கோவிலுக்கு, கல்ஹாரத்துடன், 122 அடி உயரமுள்ள ராஜகோபுரம் கட்டும் பணி, 2009, நவ., 18ம் தேதி, அடிக்கல் நாட்டு விழாவுடன் துவங்கியது. ராஜகோபுரம், அடித்தளம், 30 அடி உயரமும், கல்ஹாரம், 40 அடி உயரமும், 82 அடி உயரமுள்ள, ஒன்பது நிலை கோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, 4.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராஜகோபுர பணிகள் துவங்கி, 2011ம் ஆண்டு, ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் ஆரம்பம் முதலே, மந்தகதியில் நடந்து வந்ததால், கோபுரம் அடித்தளம் மட்டும் அமைக்கப்பட்டது. கல்ஹாரம் அமைக்கும் பணி துவங்காமல், ஓராண்டு கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, மீண்டும் துவங்கிய கல்ஹாரம் பணிகள், 80 சதவீதம் முடிந்த நிலையில், ஒப்பந்ததாரருக்கும் கோவில் நிர்வாகத்திற்கும், கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எழுந்ததால், அத்துடன் பணிகள் நிறுத்தப்பட்டன. இருதரப்பினர் மேற்கொண்ட சமரச பேச்சை அடுத்து, 2012 ஆக., மாதம் இறுதியில், கல்ஹாரம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன. இதற்கு, 2.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையில், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம், மூன்று முறை டெண்டர் விட்டும் இப்பணிகளை செய்ய யாரும் முன்வரவில்லை. கடந்தாண்டு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி ஒருவர், ராஜகோபுர பணிகள் மேற்கொள்ள முன்வந்து, டெண்டர் எடுத்தார். இந்து அறநிலைத்துறை ஆணையர் அனுமதியுடன் ராஜகோபுரம் கட்டும் பணி, அதே ஆண்டு, செப்., 1ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கப்பட்டு, துரித வேகத்தில் நடந்து வந்தன. கடந்த மாதம் வரை, மூன்று நிலைகள் முடிந்து தற்போது நான்காம் நிலை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மணல் தட்டுப்பாடு காரணமாக, நான்காவது முறையாக, ராஜகோபுரம் கட்டும் பணிகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
குவாரிகள் பணி நிறுத்தம்: ராஜகோபுரங்களை வேகமாக முடிக்க திட்டமிட்டு, பணிகள் துவங்கினேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரி இல்லை. இதனால், காஞ்சிபுரம் மற்றும் வேலுார் மாவட்டம் ஆற்காடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில், மணல் எடுத்து வந்தோம். தற்போது, அந்த மணல் குவாரிகள் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மணல் கிடைக்காமல், ராஜகோபுர பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளேன். விரைவில் ராஜகோபுர பணிகள் முடிக்கப்படும். ராஜகோபுரம் ஒப்பந்ததாரர்
ராஜகோபுர பணிகள் அடிக்கடி நிறுத்தம் காரணம் என்ன?
ராஜகோபுரத்துக்கு அடிக்கல் நடும் போது, தி.மு.க., ஆட்சி நடந்தது. இதையடுத்து, 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன் பணி நிறுத்தப்பட்டது. ஓராண்டிற்கு பின், கோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கியதும், டெண்டர் விட்ட போது மணல், சிமென்ட், ஆட்கள் கூலி குறைவாக இருந்தது. இதையடுத்து, விலை உயர்வு காரணமாக வேலை நிறுத்தப்பட்டது. ஒரு வழியாக, அடித்தளம் மற்றும் கல்ஹாரம் அமைக்கப்பட்டதும், டெண்டரை ரத்து செய்து விட்டு, ஒப்பந்ததாரர் விலகினார். இதையடுத்து, மூன்று முறை டெண்டர் கோரியும் யாரும் பங்கேற்காத நிலையில், நான்காவது முறையாக, கடந்தாண்டு நடந்த டெண்டரில், ஸ்தபதி ஒருவர், பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது, மணல் தட்டுப்பாட்டால் நான்காவது முறை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
80 சதவீதம் முடிந்தது: ராஜகோபுரத்திற்கு கல்ஹாரம் மற்றும் அடித்தளம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ஒப்பந்ததாரர் மூலம், கடந்தாண்டு மீண்டும் பணி துவங்கப்பட்டது. 18 மாதங்களில் முடிக்க ஒப்பந்ததாரரிடம் அவகாசம் கொடுத்திருந்தோம். ஒன்பது நிலைகளில், நான்காவது நிலை கட்டும் பணிகள், 80 சதவீதம் முடிவு பெற்றுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டால் தான் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஒப்பந்ததாரரை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படும். கோவில் பொறியாளர், திருத்தணி