பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
12:04
கோவை:தமிழ் வருடப்பிறப்பைமுன்னிட்டு, கோவை கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பனை, அதிகாலை முதலே, பக்தர்கள் குடும்பத்துடன் சென்று தரிசித்தனர். நெய் விளக்கேற்றி நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். விஷூ பண்டிகையும் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து, கேரள மக்கள் தங்கள் வீடுகளில் வாழை, பலா, மாம்பழம் ஆகிய முக்கனிகள், ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வைத்து, அதிகாலையில், கனி கண்டனர். ராமநாதபுரம் ஐயப்பன் கோவில், காட்டூர் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மருதமலை முருகன் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் உட்பட, நகரின் முக்கிய கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.