பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
12:04
நாமக்கல்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் நேற்று அதிகாலையில் இருந்தே சிறப்பு வழிபாடு நடந்தது.
துர்முகி ஆண்டு நேற்று முன்தினம் முடிவுற்று நேற்று ஹேவிளம்பி தமிழ் ஆண்டு துவங்கியது நேற்று அதிகாலையில் இருந்தே நாமக்கல் நகரில் உள்ள வழிபாட்டுத்தலங்களான ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் கோவில், கடைவீதி சக்தி விநாயகர், மோகனூர் சாலை பாலதண்டாயுதபாணி கோவில், பலபட்டறை மாரியம்மன்கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயரை, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை கோவில் நடை திறந்ததும் சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டது. பின், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, 108 கிலோ எடை கொண்ட வண்ண மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வெள்ளி கவசம் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு காட்சியளித்தார். வையப்பமலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலிலும், சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு கனி தரிசனம் நடந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. கோவில் வளாகம் முழுவதும் கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காளியம்மன் கோவிலிலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அதேபோல், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை. ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
*நாமக்கல் - மோகனூர் சாலை, சுவாமி நகர், மூன்றாவது தெருவில் லக்ஷ்மி குபேர ஷீரடி சாய்பாபா கோவிலில், காலை, 7:30 மணிக்கு ஆரத்தி மற்றும் கணபதி பூஜை நடந்தது. 9:00 மணிக்கு பாபா திருவுருவச்சிலைக்கு பால் அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது.