பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
11:04
திருவள்ளூர்: ராமானுஜர் 1,000 ஆண்டு அவதார மகோற்சவ விழா, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேவஸ்தானம் சார்பில், மே 4ம் தேதி முதல், நான்கு நாட்கள் நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவர் கோவில் தேவஸ்தான கவுரவ ஏஜன்ட் சம்பத், அஹோபில மடத்தின் பத்திரிகை ஆசிரியரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான அனந்த பத்மா நாபாச்சாரியார் கூறியதாவது:ராமானுஜரின் 1,000 ஆண்டு அவதார மகோற்ச வம், வீரராகவர் கோவில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ராமானுஜர் கூடத்தில், மே 4ம் தேதி துவங்கி, 7ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.இதற்காக, 14,500 ச.அடி பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, தினமும் காலை, 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, மாணவ, மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும். மதியம் 3:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பொம்மை கண்காட்சியும், ராமானுஜர் சம்பந்தப்பட்ட இயல், இசை, நாடகமும், நடைபெறும். ஆன்மிக சிந்தனையாளர்கள், ஆத்ம ஞானிகள் பலர் பங்கேற்க உள்ளனர். ராமானுஜ நாம சங்கீர்த்தனம், தேசிக பிரபந்தம் அரையர் சேவை, ஸ்ரீரங்கம் வீணை ஏகாந்தம், வட, தென் மறை கலந்த ஜூகல் பந்தி; ராமானுஜரின் மறு அவதாரமாகிய வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து முழு நீள சமஸ்கிருத மேடை நாடகம் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும். மேலும், வைணவ புத்தக கண்காட்சி, வைதீக ஆசார அனுஷ்டானங்களை அறிந்திட அரங்குகளும் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.