பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
11:04
பொன்னேரி: ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்வசத்தில், ஹரியும், ஹரனும் சந்திக்கும் சந்திப்பு திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி, திருவாயற்பாடியில் உள்ள ஹரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், கடந்த, 10ம் தேதி முதல், பிரம்மோற்சவ விழாவில், கொடியேற்றம், தங்கமுலாம்தொட்டி, சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம், புன்ன வாகனம், சேஷ வாகனம், அன்ன வாகனம் என, ஏழு நாட்களாக தொடர்ந்து உற்வசங்கள் நடைபெற்று வருகின்றன. உற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று முன்தினம். காலை, 8:00 மணிக்கு, நாச்சியார் திருக்கோவில், இரவு, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்வசமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, நள்ளிரவு, பொன்னேரி அகத்தீஸ்வரும், ஹரிகிருஷ்ண பெருமாளும், பரத்வாஜ முனிவர் சன்னதியில் சந்திக்கும் சந்திப்பு திருவிழா நடைபெற்றது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ணப் பெருமாள் மாடவீதிகள் வழியாக வந்து ஹரிஹரன் பஜார் வீதியின் தேரடி முனையில் நின்றார். அதன் மறுமுனையில் சேஷ வாகனத்தில் வந்த அகத்தீஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் வீற்றிருந்தார்.
ஒரே சமயத்தில் ஆனந்தவல்லி அம்மையார், சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை பாலசுப்ரமணியன் ஆகியோர் தனித்தனி வாகனங்களில், அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தப்படி வீற்றிருந்தனர்.அகத்தீஸ்வரர் மற்றும் பெருமாளுக்கு தாம்பூலங்கள், மாலைகள் மங்கள இசையுடன் மாற்றப்பட்டன. அதை தொடர்ந்து, அதிகாலை, 5:30 மணிக்கு, அகத்தீஸ்வரர், ஹரிகிருஷ்ண பெருமாள் ஆகியோர் ஒரே சமயத்தில் எழுந்தருளினர்.
பக்தர்கள் கோஷம்: பொன்னேரி, கோதண்டராமர் சன்னதியின் முன் வந்து, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் சந்தித்து, கற்பூர ஆரத்தி கொடுத்து அருள்பாலித்தனர். இதை கண்டு, கூடியிருந்த ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் ஓம் நமோ நாராயணா ஓம் நமச்சிவாயா என, கோஷமிட்டு, பெருமானையும், ஈஸ்வரனையும் ஒரே நேரத்தில் வழிபட்டு சென்றனர். பின், பஞ்ச மூர்த்திகளுடன் அகத்தீஸ்வரர் மற்றும் ஹரிகிருஷ்ண பெருமாள் ஆகியோர் மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.