பதிவு செய்த நாள்
22
ஏப்
2017
11:04
வத்திராயிருப்பு: “பக்தியோடு செய்யும் பூஜைக்குத்தான் வலிமை உண்டு. பக்தியில்லாமல் மணிக்கணக்கில் பூஜை செய்தாலும் பயன் இல்லை,” என, வத்திராயிருப்பில் நடந்த விழாவில் சிருங்கேரி மடாதிபதி பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அருளாசி வழங்கினார். அவர் பேசியதாவது: தன்னை வணங்கும் பக்தன் பணக்காரணா, படித்தவனா, அதிகாரத்தில் இருப்பவனா என்றெல்லாம் இறைவன் பார்ப்பதில்லை. அவருக்கு தேவை பக்தனுடைய பக்தி மட்டும்தான். வேறு எதையும் அவர் பக்தர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. பக்தி இல்லை என்றால் ஒருவன் எவ்வளவு நேரம் பூஜை செய்தாலும் அதனை பகவான் ஏற்றுக்கொள்ள மாட்டார். உளப்பூர்வமான பக்தியுடன் ஒருவன் ஐந்து நிமிடம் பூஜை செய்தாலும் அதை இறைவன் மனமுவந்து ஏற்றுக்கொள்வார். இதைத்தான் பகவத் கீதையில் இறைவன் வலியுறுத்துகிறார்.
கண்ணப்ப நாயனார் : யாராக இருந்தாலும் பக்தியோடு எதை கொடுத்தாலும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்கிறார். அதே போல்தான் குரு கிருபையும். குருவிடம் பக்தியில்லாமல் போனால் அவனுக்கு குருக்கிருபை கிடக்காது. பகவான், குரு விடம் நாம் பக்தியோடு நடந்து கொள்வது மிக முக்கியம். காட்டில் மிருகங்களை வேட்டையாடி கொன்று தின்ற வேடன் தன்னிடம் இருந்த சிவ பக்தியினால் இறைவனின் அருளுக்கு பாத்திரமானான் என்பதை, கண்ணப்ப நாயனார் கதை மூலம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு வேடன் எப்படி நாயனார் ஆனார். அவனுக்குள் இருந்த பக்தி அவனை ஒரு உன்னத நிலையை அடைய வைத்தது.
மனதின் சுபாபம்: நாமும் உண்மையான பக்தியோடு இருந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும். எல்லோரும் பூஜை செய்கின்றனர், ஜெபம் செய்கின்றனர் ஆனால் அவர்களது மனது அங்கே இருப்பதில்லை. பூஜையில் உட்காரும்போதுதான் மனது எங்கெல்லாமோ செல்கிறது. இந்த மனதின் சுபாவமே சிறிய அர்ப்பமான விஷயங்களில்தான் அதிக ஈடுபாடு காட்டும். காற்றைவிட வேகமாகச் செல்லும். அதைபிடிக்க முடிவதில்லை. அது எங்கே செல்கிறது என்பதை கண்டறிய வேண்டும். பணம் சேர்ப்பது, சொத்து சேர்ப்பது போன்ற அற்ப விஷயங்களை நோக்கித்தான் சுற்றி வருகிறது.
கல்லும், மண்ணும்: பணம் நமக்கு நிறைய வேண்டும் என்ற மனிதனின் ஆசைதான் இதுபோன்ற சிந்தனைகள் மனதில் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. தேவையில்லை என கருதினால் மனம் எதற்காக அங்கு செல்லப்போகிறது. நாம் தெருவில் நடந்து போகிறோம். போகும்போது வழியில் கல்லும், மண்ணும் ஆங்காங்கு கிடக்கிறது. அதை நோக்கி நமது மனது செல்வதில்லை. ஏனென்றால் எந்த ஒரு பொருளை வேண்டாத பொருளாக மனது கருதுகிறதோ அதை நோக்கி மனம் செல்வதில்லை. அதேபோல் எது ஒன்று வேண்டும் என மனது கருதுகிறதோ அதை நோக்கி மனம் செல்கிறது.
பக்தி பூஜைக்கு வலிமை: பூஜை செய்யும் நேரத்திலாவது பணம் போன்ற மற்ற விஷயங்களை வேண்டாதவையாக கருதவேண்டும். பகவான் ஒருவர் மட்டும் தான் எனக்கு வேண்டியவர், மற்ற எதுவும் தேவையில்லை என மனது தீர்மானித்தால் மனது இறைவனை விட்டு வேறு எங்கும் செல்லாது. அந்த தீர்மானம்தான் மனிதனுக்கு வருவதில்லை. அந்த முடிவை எடுப்பதற்கு மனதில் ஒரு வைராக்கியம் வேண்டும். பக்தியோடு செய்யும் பூஜைக்குத்தான் வலிமை உண்டு. பக்தியில்லாமல் மணிக்கணக்கில் பூஜை செய்தாலும் பயன் இல்லை, என்றார்.