பதிவு செய்த நாள்
22
ஏப்
2017
12:04
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த மண்டலாபிஷேக நிறைவு விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம், கடந்த மாதம், 3ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. இதையடுத்து, கோவில் வளாகத்தில், 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா தொடர்ந்து நடந்து வந்தது. மண்டலாபிஷேக விழாவின் நிறைவு நாளான நேற்று, காலை, 8:00 மணிக்கு, யாகசாலை பூஜை மற்றும் ஐந்து கலசங்கள் அமைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.