பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
02:04
குளித்தலை: காவிரியாற்றில் தண்ணீர் வறண்டு காணப்படுவதால், அங்கு மாரியம்மன் திருவிழா முன்னிட்டு, தற்காலிக தொட்டி அமைக்க, குளித்தலை பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா, நாளை இரவு, குளித்தலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அழங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இருந்து பூக்கள் கொண்டு வந்து, அம்பாளுக்கு ஆராதனை செய்வர். தொடர்ந்து, நாள்தோறும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு உட்பட்ட கிராமமான, பெரியபாலம், மலையப்பன் நகர், பாரதி நகர், மணத்தட்டை, தேவதானம், நாப்பாளையம், கோட்டமேடு, எழுநூற்றுமங்களம், வாலாந்தூர், புதுப்பாளையம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு வாரம் திருவிழாவாக கொண்டாடி மகிழ்வர். அப்போது, பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், மாரியம்மன் கோவில் கம்பத்தில் அதிகாலையில் மற்றும் இரவு நேரத்தில் கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து கம்பத்தில் ஊற்றுவர். மேலும், பக்தர்கர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், பால்குடம், அக்கினி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்ற, காவிரி ஆற்றில் குளித்துவிட்டு, அங்கிருந்து முக்கிய வீதி வழியாக வந்து, மாரியம்மன் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றுவர். இரண்டு வாரமும், கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் குளித்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில், தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால், காவிரி வறண்ட நிலையில் காணப்படுகிறது. ஆற்றில் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாததால், விழாவை கொண்டாட மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், தற்காலிக மின் இணைப்புடன் கூடிய, குளியல் தொட்டி மற்றும் போர்வெல் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.