சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கட்டுக்குடிப்பட்டியில் பாரம்பரிய வழக்கப்படி பேத்தப்பன் திருவிழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள செல்வ விநாயகர், மகாமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஏப்., 30 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, ஆரத்தி வழிபாடு, பால்குடம், பூச்சொரிதல் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று பாரம்பரிய பேத்தப்பன் திருவிழா நடந்தது. பேத்தப்பன் மன்னனும் அவரது கர்ப்பிணி மனைவியும், எதிரிகளோடு போரிட்டு இறந்ததை குறிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்பட்டது. மந்தையிலிருந்து இளைஞர்கள் கிராம தெய்வங்களை போல் வேடமணிந்து ஆடிப்பாடி ஊர்வலமாக சென்றனர். முட்டைகளையும், வண்ணப் பொடிகளையும் ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டனர். தொடர்ந்து குச்சியால் அடிக்க வந்த சிறுவர்களை பேத்தப்பன் வேடமணிந்தவர் உலக்கையை கொண்டு விரட்டினார். பெண்கள் வட்டமாக கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.