பதிவு செய்த நாள்
02
மே
2017
12:05
கோபி: பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், 1,008 சங்காபிஷேக பூஜை நேற்று நடந்தது. கோபி அருகே, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், 74வது ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா, கடந்த மாதம், 29ல் துவங்கியது. ஏப்.,30ல் லட்சார்ச்சனை பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று காலை, 10:30 மணிக்கு, 1,008 வலம்புரி சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடந்தது. பின் மகன்யாச தீர்த்தம் கொண்ட மூன்று கலசங்களுடன், ஆகமவிதிப்படி கோவிலை குருக்கள் வலம் வந்தனர். மேளதாளம் முழங்க, மகன்யாச தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து மதியம் 12:00 மணிக்கு, அம்மனுக்கு பாவாடை நைவேத்யம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜ் செய்திருந்தார்.